கரோனா வைரஸ் நிவாரண நிதி- ரூ.51 கோடி வழங்கியது பிசிசிஐ

கரோனா வைரஸ் நிவாரண நிதி- ரூ.51 கோடி வழங்கியது பிசிசிஐ
Updated on
1 min read

கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தையும் நெருங்கி உள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கரோனா வைரஸின் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மக்கள் தாரளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதுறித்து கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பதிவில் ,“நம் நாட்டின் வளங்களை கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிட திருப்பிவிட வேண்டிய நேரம் இது.இதற்காக எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். மேலும்என்னுடைய ஒரு மாத ஊதியத்தையும் வழங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதவிர கவுதம் கம்பீர் நடத்திவரும் அறக்கட்டளை சார்பில் டெல்லியில் சாலையோரம் வசிக்கும் மக்கள், வீடில்லாதவர்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் 2 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், இந்திய அணி வீரருமான சுரேஷ் ரெய்னா கரோனா வைரஸ் தடுப்புக்கு ரூ.52 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இதில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சமும், உ.பி. முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சத்தையும் சுரேஷ் ரெய்னா நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யா ரஹானே கரோனா வைரஸ் எதிர்ப்புக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரஹானே ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி நிதியை வழங்கியுள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, இதர நிர்வாகிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்த நிதியை வழங்கியுள்ளனர் . இதன் மூலம் கரோனா பாதிப்பை எதிர்த்து போராட உதவியாக அமையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் மாநில அரசுகளுடன் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களும் இணைந்து கரோனா நிவாரணப் பணியை மேற்கொள்ளும் எனத் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர்...

மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தனது எம்.பி. தொகுதி நிதியிலிருந்து பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார். -பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in