Published : 26 Mar 2020 07:41 AM
Last Updated : 26 Mar 2020 07:41 AM

ஐபிஎல் டி 20 தொடர் ரத்தாக வாய்ப்பு?

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ரத்து செய்யும் முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 29-ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் போட்டிகளை ஏப்ரல் 15-ம்தேதி வரை பிசிசிஐ தள்ளி வைத்திருந்தது. வைரஸ் தொற்று குறைந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து தீர்மானிக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் நாடு முழுவதும் நிலவி வரும் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை.

இதுவரை வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் டி 20 தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறும்போது, “தற்போதைய சூழ்நிலையில் என்னால் எதுவும் கூறமுடியாது. ஐபிஎல் தொடரை தள்ளிவைத்த நாளில் எப்படி இருந்தோமோ அதே சூழ்நிலையில்தான் தற்போதும் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எதுவும் மாறவில்லை. அதனால் என்னிடம் எந்த பதிலும் இல்லை. காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி” என்றார்.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது,“ 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்பது ஏப்ரல் 14-ம் தேதிக்குள் விஷயங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது மேம்படக்கூடும் ஆனால் அதிக அளவிலான கட்டுப்பாடுகள் இருக்கும். இதனால் ஐபிஎல் டி 20 தொடரை ரத்து செய்யாமல் இருந்தால் அது முட்டாள்தனம்தான்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x