Published : 26 Mar 2020 07:40 AM
Last Updated : 26 Mar 2020 07:40 AM

மாற்றி அமைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிக்கு அனைத்து தரப்பினரும் தியாகம் செய்ய வேண்டும்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் வேண்டுகோள்

அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் செயல்பட அனைத்து தரப்பிலிருந்தும் தியாகங்களும் சமரசங்களும் தேவைப்படும் என்றுசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் தெரிவித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரைநடத்த திட்டமிடப்பட்டு இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும்கரோனா வைரஸால் அடுத்தஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இதற்கு முன்னர் உலக போர்கள்காரணமாக 3 முறை ஒலிம்பிக்போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது முதன்முறையாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வருடத்துக்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைஅடுத்து மாற்றி அமைக்கப்படும் ஒலிம்பிக் போட்டியை நோக்கி நகர்வதில் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்களும், சர்வேதச ஒலிம்பிக் கமிட்டியும் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளன.

இருப்பினும் அடுத்த ஆண்டு எந்த தேதியில் போட்டியை தொடங்குவது என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அதேவேளையில் 2021-ம் ஆண்டு கோடை காலத்துக்குள் போட்டிகள் நடத்தப்படும் என சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.

இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறும்போது, “தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தியாகங்கள் தேவைப்படும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் சமரசங்கள் தேவைப்படும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பங்கு விளையாட்டு வீரர்களின் ஒலிம்பிக் கனவுகளை நனவாக்குவதுதான்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வது குறித்துவிவாதிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே போட்டியை ரத்து செய்வதற்கு நாங்கள் சாதகமாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மட்டுமே போட்டியை நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. புதிய தேதியை முடிவு செய்வதற்கு அனைத்து வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிப்போம்” என்றார்.

2021-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒரேகான் நகரில் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை உலக தடகளசாம்பியன்ஷிப் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தடகள சாம்பியன்ஷிப்பை மாற்றி அமைக்க உலக தடகள சங்கம் தயாராகி வருகிறது.

அதேவேளையில் 2021-ம்ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை ஜப்பானின் ஃபுகுயோகா நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பை வேறு தேதிக்கு மாற்ற சர்வதேச நீச்சல் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அநேகமாக இந்த இரு பெரிய தொடர்களும் 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்படக்கூடும். ஏனெனில் இந்த ஆண்டில் உலகளவில் பெரிய அளவிலான விளையாட்டு தொடர்கள் நடைபெறவில்லை. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x