Published : 25 Mar 2020 11:39 AM
Last Updated : 25 Mar 2020 11:39 AM

2006-07-ல் ஸ்ரீசாந்தின் அபார பவுலிங், லஷ்மண் அற்புதம்: கிறிஸ்துமஸ் நேரத்தில் தெ.ஆ.வுக்கு அதிர்ச்சித் தோல்வி- நினைவு கூரும் ஜாஃபர்

ராகுல் திராவிட் தலைமையில் 2006-07 தொடருக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி சென்ற போது கிறிஸ்துமஸ் தினத்துக்கு 7 நாட்கள் இருக்கும் போது தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் அணிக்கு அதிர்ச்சித் தோல்வி கொடுத்தது.

இந்த அணியில் வாசிம் ஜாஃபர் இருந்தார், கங்குலி அப்போதுதான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணிக்குள் வந்திருந்தா, ஜொஹான்னஸ்பர்கில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாது, குறிப்பாக ஸ்ரீசாந்தின் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா முடங்கியதை யாரும் மறக்க முடியாது.

அந்த அணியிலிருந்த வாசிம் ஜாபர் சமூக ஊடகத்தில் அந்தப் போட்டியை பார்த்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எல்லோரும் எப்படி வீட்டில் பொழுதைக் கழிக்கின்றீர்கள்?. நான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அங்கு பெற்ற முதல் வெற்றியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீசாந்த் எப்படி வீசினார்...முதல் இன்னிங்சில் கங்குலியின் கடினமான இன்னிங்ஸ் (51), விவிஎஸ் லஷ்மன் வழக்கம் போல் 2வது இன்னிங்சில் மிகப்பிரமாதமாக ஆடினார். இந்தப் போட்டியை நினைத்து நினைத்து அகமகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் திராவிட் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஜாபர் 9 ரன்களிலும் சேவாக் 4 ரன்களிலும் வெளியேற திராவிட் (32), சச்சின் (44), லஷ்மண் (28), கங்குலி (51) ஆகியோர் கடினமாக ஆடி நிடினி, ஸ்டெய்ன், நெல், போலாக், ஜாக் காலிஸ் அடங்கிய கடினமான பந்து வீச்சுக்கு எதிராக ஓரளவுக்கு நல்ல ஸ்கோரான 249 ரன்களை எட்டினர். கடைசியில் விஆர்வி சிங் என்ற பவுலர் 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன் எடுத்தது பெரிய பங்களிப்பாக அமைந்தது. போலக் 4, நிடினி 3, காலிஸ் 2 என்று விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

ஸ்மித், காலிஸ், கிப்ஸ், ஆம்லா, ஏபி டிவில்லியர்ஸ், பவுச்சர், ஷான் போலாக் அடங்கிய வலுவான் பேட்டிங்குக்கு 249 ரன்கள் போதுமா? ஆனால் அப்போதுதான் ஸ்ரீசாந்த் தான் யாரென்று காட்டினார், தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்திய அணியினருக்குமே கடும் ஆச்சரியம்.

கிப்ஸ் விக்கெட்டை ஜாகீர் கான் டக் அவுட் செய்ய, ஸ்மித், ஆம்லா, காலிஸை ஸ்ரீசாந்த் அருமையான ஸ்விங் பவுலிங்கில் லஷ்மண் கேட்சுக்கு வீழ்த்தினார், ஸ்மித் எல்.பி.ஆனார். ஆஷ்வெல் பிரின்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 24 ரன்களை எடுக்க 25 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா ஸ்ரீசாந்தின் அசாத்தியமான ஸ்விங் பவுலிங்குக்கு 84 ரன்களுக்கு அதிர்ச்சிகரமாக சுருண்டது.

165 ரன்கள் பின் தங்கிய நிலையில் கடும் ஆத்திரத்துடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்ஸில் பந்து வீசினர். ஜாபர் மீண்டும் சொதப்பி 4 ரன்களில் வெளியேற சேவாக் தன் பாணியில் 6 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். ஆனால் திராவிட் (1), சச்சின் (14) வெளியேற 61/4 என்று இந்திய அணி தடுமாறியது. அப்போது கங்குலி (25), லஷ்மண் ஜோடி இணைந்து ஸ்கோரை 119க்கு உயர்த்தினர், பிறகு தோனி (18), லஷ்மண் இணைந்து ஸ்கோரை 147க்க்கு உயர்த்த தோனி 18 ரன்களில் வெளியேறினார். அனில் கும்ப்ளேயும் 1 ரன்னில் வெளியேற 148/7 என்ற நிலையில் விவிஎஸ் லஷ்மண் பிரமாதமான ஒரு இன்னிங்ஸை ஆடி 12 பவுண்டரிகளுடன் 73 ரன்களை எடுக்க ஜாகீர் கான் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுக்க இந்திய அணி 236 ரன்களுக்குச் சுருண்டது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 402 ரன்கள்.

கடும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் இருந்த தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் இறங்கும் போது ஜாகீர் கான் கிப்சை டக்கில் வீழ்த்த ஸ்ரீசாந்த் மீண்டும் ஆம்லா, காலிஸ், கிரேம் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தி முதுகெலும்பை உடைத்தார். ஆஷ்வெல் பிரின்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 97 ரன்களை எடுத்தார். ஷான் போலக் அதிரடி 40 ரன்களை எடுத்தார். ஆனால் ஜாகீர் கான், ஸ்ரீசாந்த், கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த 278 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டு தோல்வி கண்டது.

தென் ஆப்பிரிக்க மண்ணில் 15 ஆண்டுகால பயணத்தில் முதல் வெற்றியை இந்திய அணி ஈட்டியது. ஸ்ரீசாந்த் ஆட்ட நாயகன். கிறிஸ்துமஸ் தினத்துக்கு 7 நாட்கள் இருக்கும் போது தென் ஆப்பிரிக்காவை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது இந்திய அணி, குறிப்பாக ஸ்ரீசாந்த். ஆனால் அடுத்த 2 டெஸ்ட்டில் தோல்வியடைந்து தொடரை 1-2 என்று இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x