Published : 25 Mar 2020 08:13 AM
Last Updated : 25 Mar 2020 08:13 AM

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி ஒருவருடம் தள்ளிவைப்பு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவிப்பு

ஷின்சோ அபே

டோக்கியோ

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒருவருடம் தள்ளி வைக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சம்மதம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. மேலும் பல்வேறு நாட்டு விளையாட்டு நட்சத்திரங்களும் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.

இதுஒருபுறம் இருக்க உலகதடகள சங்கமும் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தது. ஆனால் இவற்றுக்கு முதலில் இசைவு தெரிவிக்க மறுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்தஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக இறங்கி வந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை எப்போது நடத்துவது என்ற முடிவு 4 வாரங்களுக்குள் எடுக்கப்படும் என தெரிவித்தது.

இதற்கிடையே தங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக கனடா மற்றும் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் சங்கங்கள் நேற்று முன்தினம் அறிவித்தன. இதற்கிடையே கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சூழ்நிலை மேலும் மோசமானால் வீரர்களின் உடல் நலன் கருதி ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்கும் முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் எனஜப்பான் நாட்டு பிரதமர் ஷின் சோஅபே நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஷின்சோ அபே நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஒலிம்பிக் போட்டிகளை ஒருவருடம் தள்ளிவைக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, நான் பரிந்துரை செய்தேன். அதை 100 சதவீதம் ஏற்றுக்கெள்வதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்” என்றார்.

இந்த முடிவால் டோக்கியோ நகரம் பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நகரம் குறிப்பிட்ட காலத்துக்குள் சிறப்பாக செய்து முடித்திருந்தது. மேலும் பெருவாரியான டிக்கெட்களையும் விற்று தீர்த்திருந்தது.

புறக்கணிப்புகள், தீவிரவாததாக்குதல்கள், போராட்டங்கள் ஆகியவற்றை சந்தித்த அனுபவங்களை கொண்டிருந்தாலும் 1948-ம்ஆண்டில் இருந்து 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி தடையின்றி நடத்தப்பட்டு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக வர்ணிக்கப்படும் ஒலிம்பிக் போட்டி தற்போது முதன்முறையாக கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 17,147 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு போட்டிகளை ஒட்டுமொத்தமாக முடக்கி உள்ளது. மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க உலகம் முழுவதும் 1.7 பில்லியன் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் 12.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்திருந்தது. தற்போது ஒருவருடத்துக்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மேலும் 6 பில்லியன் டாலர் செலவழிக்கும் நிலை ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது. போரினால் 3 முறை ரத்து
ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 1896-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. வரலாற்றில் 3 முறை மட்டுமே ஒலிம்
பிக் போட்டிகள் நடத்த முடியாமல் போனது. உலக போர்கள் காரணமாக 1916-ம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி, 1940-ல் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி, 1944-ல் லண்டனில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ஆகியவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது முதன்முறையாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x