Last Updated : 24 Mar, 2020 09:33 PM

 

Published : 24 Mar 2020 09:33 PM
Last Updated : 24 Mar 2020 09:33 PM

மறக்க முடியுமா இந்த நாளை: 4 உலகக்கோப்பைக்குப்பின் ஆஸி.யை பழி தீர்த்த இந்திய அணி;யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆல்ரவுண்ட் ஆட்டம்

ஆர்ப்பரிப்பில் யுவராஜ் சிங் : கோப்புப்படம்

கடந்த தசம ஆண்டுகளில் இந்திய அணி இழந்துவிட்ட மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் அவரும் ஒருவர். அவர் இந்திய அணிக்குள் இருந்த காலம் வரை நடுவரிசை பேட்டிங் வரிசை மிக வலுவாக இருந்தது அவர் புற்றுநோயால் அவர் கிரிக்கெட் களத்துக்கு வரமுடியாமல் போனதோ அப்போதே அவரின் கிரிக்கெட் அஸ்தமனம் தொடங்கிவிட்டது.

மிகச்சிறந்த மேட்ச் வின்னர், இக்கட்டான சூழலில் பல நேரங்களில் அணியை வெற்றி்ப்பாதைக்கு அழைத்துச் சென்ற வீரர், அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. யாரை குறிப்பிடுகிறோம் என்பதை புரிந்திருப்பீர்கள்.. ஆம் யுவராஜ் சிங்தான்..

2011-ம்ஆண்டு உலகக்கோப்பையை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. தோனியின் தலைமையில் கிடைத்த கோப்பை, அதுமட்டுமல்லால் அப்போது இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் என இந்திய அணி சர்வ வல்லமைபடைத்ததாக இருந்தது. யாரேனும் ஒரு முக்கிய வீரர் திடீரென ஆட்டமிழந்துவிட்டால், எதிர்பாராத வீரர் ஆட்டத்தை தூக்கிநிறுத்திவிடும் வல்லமை அப்போது இருந்தது.

அப்படிப்பட்ட ஆட்டம்தான் ஆமதபாத்தில் 2011-ம் ஆண்டு, மார்ச 24-ம் தேதி உலகக்கோப்பைப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நாக்அவுட் முறையில் நடந்தது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து களமிறங்கியது இந்திய அணி. தொடர்ந்து மூன்றுமுறை கோப்ைபயை வென்று பெரிய மமதையில் இருந்த ஆஸி. அணிக்கு இந்திய அணியின் பெரிய சவுக்கடி கொடுத்து வெளியேற்றியது.

" இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் ஆல்ரவுண்டர் ஆட்டத்தை யாராலும் மறக்க முடியுமா. ஆட்ட நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங், உலகக்கோப்பையை வெல்வதற்கு இவரின் இந்த போட்டியின் ஆட்டம்தான் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. "

ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைப் போட்டியில் கடைசியாக 1996-ம் ஆண்டு இலங்கையிடம் தோற்றிருந்தது. அதன்பின் எந்த உலகக்கோப்பைப் போட்டியிலும் தோற்காமல் 1999, 2003, 2007 ஆம் ஆண்டுகளில் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்று பெரும் மமதையில் எங்களை யாராவது அசைக்க முடியுமா, வெல்ல முடியுமா என்று மற்ற அணிகளை ஏளனம் செய்தது.

இந்த உலகக்கோப்பைப் போட்டியில்கூட ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்களில் பாகி்ஸ்தானிடம் மட்டும் தோல்விஅடைந்தது. மற்ற அணிகளான நியூஸிலாந்து, ஜிம்பாப்வே, கென்யா, கனடா அணிகளை புரட்டி எடுத்திருந்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரை உள்நாட்டில் நடந்த உலகக்கோப்பை என்பதால், ரசிகர்கள் ஆதரவு வலுத்திருந்தது. லீ்க் ஆட்டத்தில் தென் ஆப்பிரக்காவிடம் நம்முடைய அணி தோற்றது. மற்றவகையில் ஐயர்லாந்து, வங்கதேசம், மே.இ.தீவுகள் அணியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி கடந்த 1987ம் ஆண்டு கடைசியாக ஆஸி. அணியை வென்றதுதான். அதன்பின் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸி. அணியைச் சந்திக்க இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 1992, 1996, 1999, 2003 உலகக்கோப்பைப் போட்டியிலும் ஆஸி.யுடன் மோதி தோல்வியுடன் இந்திய அணி திரும்பியது.

இதனால் அடிப்பட்ட புலியாய் தன்னுடைய தோல்விக்கு பழிதீர்க்கவும், ஆஸி. வீரர்களின் பெருமை பேச்சுக்கு வாய்ப்பூட்டு போடவும் இந்திய அணி காத்திருந்தது. அதற்கானசரியான நேரம் வாய்த்தது.

டாஸ் வென்று ஆஸி. அணி பேட்டிங் செய்தது. 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம் போல் அமைந்துவிடுமா என்று ரசிகர்களிடையே ஒருவித கலக்கம் இருந்தது. அந்த ஆட்டத்தில் ஆஸி. அணி 359 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் உலகக்கோப்பை உடைத்தெறிந்தது நினைவிருக்கும்.

ஆனால் இந்த போட்டியில் தோனியின் கேப்டன்ஷிப் அனைவரையும் அதியசிக்க வைத்தது. ஓபனிங் பந்துவீச்சே அஸ்வினுக்கு கொடுத்து ஆஸி. அணியை திணறவிட்டார். முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த ஆஸி. 40 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் முனாப் படேல், ஜாகீர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன் சிங், சச்சின் என அனைவரும் மிகவும் டீசன்டாக பந்துவீசினர். இவர்களின் பந்துவீச்சில் உள்ள கட்டு்க்கோப்பைப் பார்த்து ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.

வாட்ஸன் 25 ரன்னில் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தாலும் 2-வது விக்கெட்டுக்கு பிராட் ஹாடின், பாண்டிங் கூட்டணி இந்திய வீரர்களுக்கு பெரிய கிலியாக அமைந்ததிருந்தது. இவர்களை பிரிக்க பல முயற்சிகள் செய்யப்பட்டது.

யுவராஜ் சிங் பந்தவீச வந்தபின்புதான் ஹாடின்53ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பாண்டிங், ஹேடின் இருவரும் 70 ரன்கள் சேர்த்துப்ப பிரிந்தனர். அடுத்து வந்த ஆபத்தான வீரர் கிளார்க் 8 ரன்னில் யுவரா்ஜ் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். மைக் ஹசி,வொயட் இருவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

அதிரடியாக ஆடிய பாண்டிங் சதம் அடித்து 104 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி ேநரத்தில் டேவிட் ஹசி 38 ரன்கள் ேசர்த்தார். ஒரு கட்டத்தில் ஆஸி. அணியின் ரன் வேகத்தைப் பார்த்தபோது 300 ரன்களை எட்டுவார்கள் என்று கணிக்கப்பட்டது.

23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு ஆஸி. அணி 110 ரன்கள் இருந்தது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சால் விக்ெகட்டுகளை இழந்து 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே சேர்த்து திணறியது.

ஆனால்,50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்திய அணித் தரப்பில் அஸ்வின்,யுவராஜ் சி்ங்தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருவரின் வி்க்கெட்டுகளுமே மிக முக்கியத்துவம் வாய்ந்தவை .

261 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தியஅணி களமிறங்கியது. சச்சின், சேவாக் எனும் பிளாஸ்டர்ஸ் களமிறங்கினர். இந்த உலகக்கோப்பைப் போட்டியில் சேவாக் ஒரு பழக்கத்தை கொண்டிருந்தார்.

அது என்னவென்றால், தான் சந்திக்கும் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்புவதுதான். இந்த தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் சேவாக் இதை வழக்கமாக வைத்திருந்ததால், ஆஸி. எதிராக பவுண்டரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரட் லீ தனது சாதுர்யமான பந்துவீச்சால் சேவாக்கை பவுண்டரி அடிக்கவிடவில்லை.

ஆனால், சச்சின் தான் சந்தித முதல் பந்தை அதாவது ஷான் டெய்ட் வீசிய முதல் பந்தை அருமையாக பவுண்டரிக்கு அனுப்பி சேவாக்கிற்கு பதிலாக நான் அடிக்கிறேன் என்று ரசிகர்களுக்கு உற்சாகமளித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக் 15 ரன்னில் வாட்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கம்பீர், சச்சின் ஜோடி நல்ல ஸ்கோரை எடுத்தனர். சச்சினுக்கு ஒத்துழைப்பு அளித்து கம்பீர் சிறப்பாக ஆடினார். சச்சின் அரைசதம் அடித்து 53 ரன்னில் டெய்ட் பந்துவீச்சில் வெளியேறினார். இருவரும் 50 ரன்கள் சேர்த்தனர்.

கோலியும், கம்பீரும் சேர்ந்து ஓரளவுக்கு விளையாடினர். கம்பீர் 50 ரன்கள் சேர்த்து நல்ல ஃபார்மில் இருந்தார். அப்போது கோலி 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங், கம்பீயுடன் சேர்ந்து ஆட்டத்தை நகர்த்தினார். இருவரின் ஆட்டத்தால் ஸ்கோர் வேகமெடுத்தது. கம்பீர் அரைசதம் அடித்து 50 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த தோனி 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து, சிக்கலில் விட்டுச் சென்றார்.

அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங்குடன் சேர்ந்த பின் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. இருவரும் மனம் தளராமல் ஆட்டத்தை நகர்த்தினர். கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. யுவராஜ் சிங்கும், ரெய்னாவும் அவசரப்படாமல் ரன்களைச் சேர்த்தனர்.

தேர்ந்த அனுபவமான பேட்ஸ்மேன் போல் யுவராஜ் சிங் விளையாடி அரைசதம் அடித்தார். 45 ஓவருக்குபின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 30 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டபோது பிரட் லீ பந்துவீச்சில் ரெய்னா லாங்-ஆன் திசையில் அடித்த சிக்ஸரும், ஜான்ஸன் பந்தில் அடித்த பவுண்டரியும் ஆட்டத்தை மாற்றியது.

18 பந்துகளுக்கு வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. பிரட் லீ வீசிய பந்தில் யுவராஜ் சிங் வி்ன்னிங் ஷாட்டில் பவுண்டரி அடிக்க இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் 57 ரன்களிலும், ரெய்னா 34 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்திய அணி 47.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஜொலித்த யுவராஜ் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x