Published : 24 Mar 2020 12:15 PM
Last Updated : 24 Mar 2020 12:15 PM

ஆஸி. கிரிக்கெட்டின் ‘விட்டுக்கொடுக்காத’ மனநிலை இந்திய வீரர்களுக்கு வந்திருக்கிறதா? எப்படி?- பிரெட் லீ கணிப்பு

இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனான பிறகு 2014 ஆஸி. தொடரில் மைக்கேல் கிளார்க் ஸ்போர்ட்டிங் டிக்ளேர் செய்ய, 300 ரன்களுக்கும் மேலான இலக்கை நோக்கி ட்ராவுக்கு ஆடாமல் தைரியமாக விரட்டி சதம் கண்டார் விராட் கோலி, இந்தியா தோற்றாலும் வெற்றியை நோக்கிய அந்த அணுகுமுறை, ‘விட்டுக் கொடுக்காத’ அந்த அணுகுமுறை ஆஸ்திரேலிய பாணி என்று பலரும் புகழத் தொடங்கினர்.

80 ஓவர்கள் சென்ற பிறகும் புதிய பந்தை எடுக்காமல் மேலும் 66 ஓவர்களை பந்தின் சணல்கண்டு வெளியே வரும் வரை வீசி வெற்றி வாய்ப்பை மோசமாக தென் ஆப்பிரிக்காவில் நழுவ விட்ட, மே.இ.தீவுகளில் 84 ரன்கள் எடுத்தால் வெற்றி இன்னும் 14 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றிக்கு ஆடாமல் ட்ரா செய்த தோனியின் கேப்டன்சி, மற்றும் இங்கிலாந்தில் ஃபாலோ ஆன் கொடுக்காமல் ஒரு வெற்றியுடன் திருப்தி அடைந்த ராகுல் திராவிட் கேப்டன்சி ஆகியவற்றிலிருந்து விராட் கோலி கேப்டன்சி வெகுதூரம் நகர்ந்து வந்து விட்டது. தோனி இல்லாவிட்டால் கோலி வெற்றி பெற மாட்டார் என்பதெல்லாம் தோனி ரசிகர்களின் தங்கள் ‘தலைவனை’ விட்டுக் கொடுக்காத ரசிக மனோபாவத்திலிருந்து எழுவதே. உண்மையில் தோனியின் அணுகுமுறையிலிருந்து கோலி வெகுதூரம் அளவு ரீதியாகவும் தர ரீதியாகவும் விலகி வந்து விட்டார் என்பதே உண்மை.

இந்திய கிரிக்கெட்டின் பாதைத் திறப்பு கணம் என்றால் அடிலெய்டில் அன்று விராட் கோலி ஆடியது, அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் தொடரையே வென்றது, ஆஸ்திரேலிய ஸ்லெட்ஜிங் சிகிச்சையை அவர்களுக்கே அதிர்ச்சி மருத்துவமாக அளித்தது எல்லாம் கோலி ஆஸ்திரேலிய மனநிலையை இந்திய அணியிடத்தில் ஏற்படுத்தியிருப்பதாகவே பலராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இது தொடர்பாக கூறும்போது, “இது எப்படி வந்திருக்கும் எனில் நிறைய ஆஸி. பயிற்சியாளர்கள் இந்தியாவுக்கு ஐபிஎல் மூலம் வந்து பயிற்சி அளித்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் நிறைய இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

இதுதான் இந்திய அணியிடமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மனநிலை தொற்றக் காரணம். எந்தப் போட்டியாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காதே என்ற அந்த மனநிலை புதிய இந்திய அணியையும் தொற்றியது.

உண்மையில் இது இந்திய கிரிக்கெட்டுக்கும் உலக கிரிக்கெட்டுக்கும் உதவியது” என்றார் பிரெட் லீ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x