

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்துக் கிடந்தது போல் தோனியின் ரசிகர்கள் மீண்டும் எப்ப வருவார்? இப்ப வருவாரா, வரமாட்டாரா, டி20 உலகக்கோப்பையில் இல்லையெனில் இனி எப்பவுமே இல்லை என்ற ரீதியில் யோசித்து வருகின்றனர்.
ஆனால் தோனி பொதுவாக ரசிகர்களை மதிப்பார், ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை மதிக்கமாட்டார், ஆனால் ஊடகங்களை அவர் அவ்வளவாக மதித்ததில்லை.
இந்நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சைலண்ட் ஆக அவர் ஓய்வு பெறுவார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
தைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகைக்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் இது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அணி நகர்ந்து விட்டது.
தோனியும் பெரிய அறிவிப்புகளை வெளியிடுபவர் இல்லை. எனவே நான் நினைக்கிறேன் அவர் அமைதியாக அறிவிப்பில்லாமல் ஓய்வு பெறுவார் என்று.
இவ்வாறு கூறினார் கவாஸ்கர்.
கவாஸ்கர் கூறுவதுதான் சரி போல் தோன்றுகிறது அவர் பெரிய அறிவிப்பில்லாமல்தான் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார், அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு எதையும் அவர் அது தொடர்பாக மேற்கொள்ளவில்லை.
ஆனால் பிசிசிஐ தொடர்ந்து தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக ஆடினால் மீண்டும் அணிக்குத் திரும்பலாம் என்ற ஹேஷ்யங்களை வெளியிட்டு வருகின்றன.