Published : 19 Mar 2020 09:02 AM
Last Updated : 19 Mar 2020 09:02 AM

வீரர்களின் உடல் நலனை ஐஓசி பணயம் வைக்கிறது: கிரீஸ் வீராங்கனை பகிரங்க குற்றச்சாட்டு

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று விளையாட்டுத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது.

இதனால் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா? என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) டோக்கியோ ஒலிம்பிக் குறிப்பிட்ட தேதியில் நிச்சயம் நடைபெறும் என தொடர்ந்து கூறி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளதால் தற்போதைய நிலையில் எந்தவித கடினமான முடிவையும் எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளது.

இதற்கிடையே வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்போது முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இது விதிவிலக்கான சூழ்நிலை. இதற்கு விதிவிலக்கான தீர்வுகள் தேவை.

தடகள வீரர்களின் சுகாதாரம், போட்டியை ஒருங்கிணைத்தலில் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக தடகள வீரர்களுக்கு குறைந்த அளவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் விதமான தீர்வை அளிப்பதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதி பூண்டுள்ளது. எனினும் இந்த சூழ்நிலையில் எந்தவொரு தீர்வும் சிறந்ததாக இருக்காது, இதனால்தான் நாங்கள் விளையாட்டு வீரர்களின் பொறுப்பு மற்றும் ஒற்றுமையை நம்புகிறோம்” என்றார்.

இதற்கிடையே கிரீஸ் நாட்டின் போல்வால்ட் வீராங்கனையான கேத்ரினா ஸ்டெஃபானிடி தனது ட்விட்டர் பதிவில், “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது எங்களது உடல் நலனையும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்க விரும்புகிறதா?, ஒலிம்பிக் போட்டி 4 மாதங்களுக்குப் பிறகுதான் நடைபெற போவதாக கூறுகிறீர்கள். ஆனால் இன்றே நீங்கள் எங்களை ஆபத்தில் தள்ளுகிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x