Published : 13 Mar 2020 05:38 PM
Last Updated : 13 Mar 2020 05:38 PM

ரசிகர்கள் இல்லை, கைகுலுக்கல்கள் இல்லை: ஆஸி.யின் அட்டகாசமான பந்து வீச்சில் சரணடைந்த நியூஸிலாந்து 

சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமை நியூஸிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி இந்தப் போட்டி நடந்தது, ஆட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கள் இல்லை, வெறும் கைத்தட்டல்கள் மட்டுமே காண முடிந்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 187 ரன்களுக்கு 41 ஒவர்களில் சுருண்டது. பாட் கமின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஹேசில்வுட், ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா வார்னர், பிஞ்ச் மூலம் அதிரடியாகத் தொடங்கியது. ஆனால் நியூஸிலாந்து பவுலர்கள் சீரான விக்கெட்டுகள் மூலம் ஆஸி.யைக் கட்டுப்படுத்தினர் குறிப்பாக சாண்ட்னர் ( 10 ஓவர் 34/2), இஷ் சோதி (3/51) பிரமாதமாக வீசினர். மார்னஸ் லபுஷேன் மிகப்பிரமாதமான ஒரு அரைசதத்தை எடுக்க ஆஸ்திரேலியா 258/7 என்று முடிந்தது. இதனை நியூஸிலாந்து நிச்சயம் விரட்டி விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிட்ச் எதிர்பார்த்ததை விட பேட்டிங்குக்குக் கடினமாக அமைந்ததோடு ஸ்டார்க், கமின்ஸ், ஹேசில்வுட் ரன்களே கொடுக்காமல் நியூஸிலாந்தை படுத்தியதோடு ஆடம் ஸாம்பா (2/50) விராட் கோலியை வெளியே இழுத்து கூக்ளியில் பவுல்டு செய்தது போல் கேன் வில்லியம்சனை வெளியே இழுத்து பவுல்டு செய்ததில் வில்லியம்சன் 19 ரன்களில் வெளியேறினார்.

டாம் லேதம் (38), கொலின் டி கிராண்ட் ஹோம் (25) என்று கொஞ்சம் அச்சுறுத்தினர், ஆனால் லேதம் ஆட்டமிழந்தவுடன் அடுத்த 40 ரன்களுக்கு படபடவென விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களுக்குச் சுருண்டது.

டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 9 பவுண்டரிகளுடன் 88 பந்துகளில் 67 ரன்களையும் கேப்டன் பிஞ்ச் 75 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 60 ரன்களையும் எடுத்து 24 ஓவர்களில் 124 ரன்கள் தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அதன் பிறகு வார்னர், பெர்கூசனிடமும், பிஞ்ச் சாண்ட்னரிடமும் பெவிலியன் திரும்ப ஸ்டீவ் ஸ்மித் 14 ரன்களில் சாண்ட்னரிடம் பவுல்டு ஆனார். டி ஆர்க்கி ஷார்ட் 19 பந்துகளில் 5 ரன்கள் என்று தடுமாறி இஷ் சோதி பந்தை வெறுப்பில் டீப்பில் அடித்து கேட்ச் ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 34 பந்துகளில் 27 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, காரணம் நியூஸி.யின் சிக்கனப் பந்து வீச்சு.

மார்ஷ், அலெக்ஸ் கேரி (1) ஆகியோரை இஷ் சோதி வீழ்த்தினார், கடைசியில் கமின்ஸ் (14), ஸ்டார்க் (9) ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 258/7 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியப் பந்து வீச்சுக் கட்டிப்போட முதல் 20 ஓவர்களில் ஓவருக்கு 3.5 என்ற ரன் விகிதத்தில் ஆமை வேகத்தில் சென்றதோடு நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் விக்கெட்டையும் பறிகொடுத்தது. அதிரடி வீரர் மார்டின் கப்தில் கூட 73 பந்துகளில்தான் 40 ரன்கள் எடுத்தார்.

இவரைக் கமின்ஸ் வெளியேற்ற நியூஸிலாந்து எழும்ப முடியாமல் போனது. நியூஸிலாந்து அணி தன் கடைசி 6 விக்கெட்டுகளை 89 ரன்களுக்கு இழந்து தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு எதிராக செம பார்மில் இருந்த ராஸ் டெய்லர் 4 ரன்களில் மார்ஷிடம் வெளியேறினார்.

ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். வரும் ஞாயிறன்று இரு அணிகளும் இதே சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமலேயே 2வது போட்டியில் சந்திக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x