Published : 12 Mar 2020 09:34 AM
Last Updated : 12 Mar 2020 09:34 AM

சென்னை சிட்டி ஆட்டம் டிரா

சென்னை சிட்டி - மஸியா விளையாட்டு கிளப் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பை (ஏஎப்சி) தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை சிட்டி எப்சி தனது முதல் ஆட்டத்தில் நேற்று மாலத்தீவுகளைச் சேர்ந்த மஸியா விளையாட்டு கிளப் அணியுடன் மோதியது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே மஸியா அணியின் கார்னேலியஸ் ஸ்டீவர்ட் பாக்ஸின் வெளியே இருந்து உதைத்த பந்து கோல் கம்பத்தின் இடது புறம் தடுக்கப்பட்டது.

7-வது நிமிடத்தில் சென்னை சிட்டி வீரர் கட்சுமி யுசாவின் கிராஸை பெற்ற மஷூர் ஷெரீப்தங்கலகத் இலக்கை நோக்கிஅடித்த போது கோல்கம்பத்தின் வலதுபுறம் தடுத்து நிறுத்தப்பட்டது. 11-வது நிமிடத்தில் சென்னை சிட்டி எப்சி வீரர் அடோல்போ மிராண்டா கோல் அடித்து அசத்தினார். இந்த கோலை அடிக்க அஜித் குமார் உதவி இருந்தார்.

13 மற்றும் 15-வது நிமிடங்களில் மஸியா அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. 26-வது நிமிடத்தில் சென்னை சிட்டி வீரர் ராபர்டோ எஸ்லாவா 18 அடி தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து எதிரணியால் கோல் விழாமல் தடுக்கப்பட்டது. 41-வதுநிமிடத்தில் ஆனந்த்ராஜ் லூர்துசாமி உதவியுடன் பந்தை பெற்ற அடோல்போ மிராண்டா பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்தின் இடதுபுறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியில் சென்னை சிட்டி எப்சி 1-0 என முன்னிலை வகித்தது.

64-வது நிமிடத்தில் மஸியா அணி பதிலடி கொடுத்தது. மொகமது ஹம்ஸா கிராஸை தலையால் முட்டி மொகமது இருபான் கோல்வளைக்குள் திணிக்க ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. அடுத்த 3-வது நிமிடத்தில், இப்ராஹிம் மஹுதீ உசேன், பாக்ஸின் மையப் பகுதியில்இருந்து உதைத்த பந்து கோலாக மாறியது. இதனால் மஸியா அணி 2-1 என முன்னிலை வகித்தது.

இதன் பின்னர் சென்னை சிட்டி வீரர்கள் போராடியபோதிலும் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதிக்கட்ட நிமிடங்களில் கூடுதல் உத்வேகத்துடன் சென்னை சிட்டி வீரர்கள் செயல்பட்டனர். 90-வதுநிமிடத்தில் அடோல்போ மிராண்டா18 அடி தூரத்தில் இருந்து கோல்அடித்து அசத்தினார். இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x