Published : 11 Mar 2020 08:26 PM
Last Updated : 11 Mar 2020 08:26 PM

தோல்வி மனநிலையிலிருந்து மீளுமா இந்தியா? கவலையளிக்கும் கோலியின் ஃபார்ம், ரோஹித் இல்லை ஈடு செய்வாரா பாண்டியா: தெ.ஆப்பிரிக்காவுடன் நாளை முதல் ஒருநாள் போட்டி

தர்மசலாவில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியினர் : படம் உதவி ட்விட்டர்

தர்மசலா

நியூஸிலாந்துடன் சமீபத்திய டெஸ்ட், ஒருநாள்போட்டி தோல்விகள், கோலியின் மோசமான ஃபார்ம், ரோஹித் சர்மா இல்லாதது போன்ற மைனஸ் புள்ளிகளுடன் தர்மசலாவில் நாளை பகலிரவாக நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி

நியூஸிலாந்து சென்ற இந்திய அணி டி20 தொடரை அபாரமாகக் கைப்பற்றினாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பலத்த அடியுடன் நாடு திரும்பியது. அங்கு நிலவும் காற்று, ஸ்விங் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சுக்கான ஆடுகளம் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனச் சொல்லப்படும் கோலி ஒருநாள் தொடரில் 75 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டியிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் கோலியின் நியூஸிலாந்து தொடர், கடந்த இங்கிலாந்து தொடர் போன்று அமைந்தது. ஆதலால் இழந்த ஃபார்மை இந்த தொடரில் மீட்பார் என நம்பப்படுகிறது. டி20 உலகக்கோப்பை நெருங்கும் தருவாயில் கோலியின் ஃபார்ம் வேதனையாக இருக்கிறது.

தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா காயத்தால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போனது அணிக்கு பெரும் பின்னடைவாகும். அதேசமயம், காயத்திலிருந்து குணமடைந்து ஷிகர் தவண் அணிக்குத் திரும்பியுள்ளார். அவரின் வருகை பேட்டிங்கை பலப்படுத்தினாலும், கடந்த காலம் போல் தடவி, தடவி ரன்களைச் சேர்க்காமல் அடித்து ஆடுவது அவசியமாகும். இவருக்குத் துணையாக பிரித்வி ஷா இருப்பதால் தொடக்க பேட்டிங்கை பார்க்கச் சுவாரஸ்யமாக இருக்கும்.

நடுவரிசையைப்பலப்படுத்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குள் வந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப்பின் பாண்டியா ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.

கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார் ஹர்திக் பண்டியா அதன்பின் உடலில் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியா நீண்ட ஓய்வில் இருந்து உடல் நலம் தேறி மீண்டும் வந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் வருகை மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பாண்டியா கடந்த காலம் போல் சிறப்பாகச் செயல்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. டிஒய் பாட்டீல் தொடரில் அதிரடியாக ஆடி சதம் அடித்த பாண்டியா ஒருநாள் தொடரில் ஜொலிக்க வேண்டும் என்பது ஆசை.

அதேபோல பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் வருகையும் அணிக்கு பலம் சேர்க்கும். காயம் காரணமாக இரு மாதங்களுக்கு மேலாக விளையாடாமல் இருந்து இப்போது மீண்டும் புவனேஷ்வர் குமாரின் வருகையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவரின் இடத்தை புவனேஷ்வர் குமார் நிரப்ப வேண்டும்.

மற்றவகையில் கோலி, கேஎல் ராகுல், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், சுப்மான் கில், ரவிந்திர ஜடேஜா என பேட்டிங்கிற்கு பெரிய பட்டாளம் இருக்கிறது. ஆனால் இதில் நாளை யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியும்.

நியூஸிலாந்து தொடரில் விக்கெட் கீப்பிங் செய்த கே.எல்.ராகுல் மீண்டும் ஒருநாள் தொடரில் கீப்பிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த வகையில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப்பந்த் களமிறக்கப்படுவார்.

ஆல்ரவுண்டர் என்ற முறையில், ரவிந்திர ஜடேஜாவும், பாண்டியாவும் சேர்க்கப்படலாம். சுழற்பந்துவீச்சில் குல்தீப், சாஹல் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. தர்மசலா ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், நாளை இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தொடரை 3-0 என்று வெற்றி பெற்று நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கடந்த முறை டி20 தொடரை சமன் செய்து சென்று, இப்போது ஒருநாள் தொடரை எதிர்கொள்கின்றனர்.

டூப்பிளசிஸ், வான்டர் டூசென், கிளாசன் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும். இதில் கிளாஸன், கைல் வெரினே ஆகியோர் தென் ஆப்பிரிக்காவின் துருப்புச்சீட்டுகளாக இருப்பார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடரை வெல்ல இருவரும் முக்கியக் காரணமாக இருந்தார்கள். காயம் காரணமாக ஓய்வில் இருந்த பவுமா மீண்டும் திரும்பியுள்ளார்.

இந்தியத் தொடரில் முதன் முதலில் மலான் அறிமுகமாவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியைக் காட்டிலும் மிகுந்த நம்பிக்கை கொண்ட அணியாகவே தென் ஆப்பிரிக்கா இருக்கிறது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நிச்சயம் இந்திய அணிக்குச் சவாலாக இருக்கக்கூடும்.

நாளை நண்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x