Published : 11 Mar 2020 04:48 PM
Last Updated : 11 Mar 2020 04:48 PM

ஏ.பி.டிவில்லியர்ஸைத் தேர்வு செய்தால் நிச்சயம் சில வீரர்களுக்கு அதிருப்தியே ஏற்படும்: ஜான்ட்டி ரோட்ஸ் கருத்து 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டால் அது நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு வலு சேர்க்கும் என்று கூறிய ரோட்ஸ், இது சில வீரர்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தும் என்றார்.

இது தொடர்பாக ரோட்ஸ் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவிடம் கூறும்போது, “ஏ.பி.டிவில்லியர்ஸை தேர்வு செய்வது சுவாரஸ்யமானது, ஆனால் கடினமான ஒரு தேர்வாகவே அது அமையும்.

நாம் சிறந்த அணி ஆட வேண்டும் என்று நினைப்போம், ஆனால் இந்த முடிவு சிலர் மீது எடுக்கும் கடினமான முடிவாக மாறும் வாய்ப்புள்ளது. வேறு ஒரு வீரர் டிவில்லியர்சினால் வாய்ப்பிழந்தால் அது அவருக்கும் சிக்கல்தானே.

ஏ.பி. ஒரு சிறப்பான வீரர், அவரைத் தேர்வு செய்து ஒரு முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும், தென் ஆப்பிரிக்காவுக்கு ஆடாமல் வேறு எங்கு அவர் ஆடுவார்? ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ஆட்டத்தை அனைவரும் உற்று நோக்குகின்றனர், பிக் பாஷ் டி20 லீகிலேயே அவரது ஆட்டம் கிளாஸ் ரகம், நான் ஏபிடியின் பெரிய ரசிகன். விதிகளை மீறி அவரை அணியில் எடுக்க வேண்டும்தான் ஆனால் அதனால் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியுடன் இருக்கும் வீரர் ஒருவரது வாய்ப்பு பறிபோகும் என்பதும் உண்மைதான்.

மேலும் நான் இதைக் குறை கூற முடியாது ஏனெனில் பறிபோவது என் வாய்ப்பல்ல. ஆனாலும் ஏபிடி உலகக்கோப்பையில் ஆடுவதைப் பார்ப்பது மிகப்பிரமாதமான ஒரு விஷயம்” என்றார் ரோட்ஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x