Published : 02 Mar 2020 04:15 PM
Last Updated : 02 Mar 2020 04:15 PM

ஸ்விங், பவுன்ஸ், காற்று என்று யோசித்தே வீணாக்கி விட்டோம்...  தைரியமாக ஆடவில்லை : விராட் கோலி விறுவிறு பேட்டி

நியூஸிலாந்துக்கு எதிராக களத்தில் தோற்கவில்லை, சிந்தனையிலேயே தோற்று விட்டோம் என்று விராட் கோலி 2-0 என்ற ஒயிட்வாஷுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இதற்கு முன்னாலும் கடினமான பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் ஆடியுள்ளோம், ஆனால் அப்போது நல்ல மனவியூகத்தில் இருந்தோம். டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

இந்த டெஸ்ட் தொடரில் இதைத்தான் பேட்டிங் வரிசையாக செய்யத் தவறிவிட்டோம். முதல் டெஸ்ட் முதல்நாளிலிருந்தே பிட்ச், காற்று, ஸ்விங் பவுன்ஸ் என்று நிலைமைகளை ஊதிப்பெருக்கி அதைப்பற்றியே அதிகம் கவலைப்பட்டோம், இது கூடாது. இதற்கு முன்பாக நாங்கள் இப்படியெல்லாம் யோசித்ததே இல்லை. இந்தப் பேச்சு நம்மிடையே தற்போது ஊடுருவி வருகிறது, இதை தொடர அனுமதிக்கக் கூடாது. ஆகவே பாசிட்டிவ் ஆக யோசித்தால் திறமையும் நம்மைப் பின் தொடரும்.

நம் யோசனையில் தெளிவாக இல்லையென்றால் கால்கள் நகராது. பந்தை ஆடுவதா, விடுவதா, ஷாட் ஆடுவதா வேண்டமா என்பனவெல்லாம் நம்மைப் பிடித்து ஆட்டும். யாருடைய ஆட்டத்திலும் நான் எந்த விதமான சிக்கல்களையும் காணவில்லை, இவையெல்லாம் மனத்தடைகளே. இந்த மட்டத்தில் மனத்தடைகள் ஏற்படும் அவற்றை சரி செய்து களத்தில் இறங்கி நம் திட்டங்களை செயல் படுத்துவதே சிறந்தது.

எனவே களத்தில் இறங்கும் போது சூழ்நிலையின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் நாம் எதற்கு இறங்கியிருக்கிறோம், ரன்கள் சேர்க்க அப்படிப்பட்ட மனநிலையில் ஆடிக்கொண்டே போக வேண்டும்.

எனவே இந்தத் தொடரில் நம் பார்வையில்தன தவறு இருந்தது. நாங்கள் போதிய அளவுக்கு பாசிட்டிவ் ஆக இல்லை, தைரியமாக ஆடவில்லை. முன்பெல்லாம் நெருக்கடி தருணங்களிலிருந்து பாசிட்டிவ் மனநிலையில்தான் வெளியே வந்திருக்கிறோம், தோற்றாலும் சரணடையாமல் சவால் அளித்துள்ளோம். மனநிலை சரியாக பாசிட்டிவாக அமைந்தால் திறமை தானாக பின் தொடரும்.

எனவே நாம் இதையெல்லாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளுதல்தான் ஒரே வழி. எனவே எது நடந்ததோ அதிலேயே நின்று விடாமல் அதிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்வதுதான் சிறந்தது. மேலும் மறுத்துக் கொண்டேயிருந்தால் நாம் கற்றுக் கொள்ள முடியாது, தவறு நம் பக்கம் இருக்கிறது என்றால் அதை ஏற்றுக் கொண்டு பரிசீலித்துத் திருத்திக் கொள்வதுதான் நல்லது.

சர்வதேச மட்டத்தில் எளிதான வெற்றி என்ற ஒன்று இல்லை. அதே போல் சர்வதேச கிரிக்கெட்டில் உத்தரவாதமாக கொடுக்கப்பட்டது என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு வெற்றியையும் நாம்தான் முயன்று பெற வேண்டும். நாம் நன்றாக ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த வெட்கமும் தேவையில்லை. சிறந்த ஆட்டத்தின் அருகில் கூட நாம் இல்லை.

ரஹானே நமக்கா நல்ல இன்னிங்ஸ்கள் பலவற்றை ஆடியுள்ளார், நான் பேட்டிங் சராசரிகளைப் பார்ப்பவனல்ல. தாக்கம் ஏற்படுத்தும் ஆட்டம் தான் முக்கியம். அவரால் அணிக்காக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஆட முடியுமா என்பதுதான் என் பார்வை. அவரிடமிருந்து இத்தகைய ஆட்டத்தை எதிர்பார்க்கும் போதெல்லாம் ரஹானே ஆடிக்கொடுத்திருக்கிறார்.

மிடில் ஆர்டர் ஆன நாங்கள் 42-44 சராசரி வைத்திருப்பவர்கள் சேர்ந்து ஆடி ரன்களைக் குவிப்பது முக்கியம். சில இன்னிங்ஸ்களில் இதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக மோசமான வீரர்கள் ஆகிவிடப் போவதில்லை. ஒரு அணியாகத் திரண்டு எழுந்து 350-400 ரன்களைச் சேர்ப்பது அவசியம். ஒரு அணியாக பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து ஆடவேண்டும் எனவே நான் இதில் தனிப்பட்ட வீரர்களை குறிப்பாக தனிமைப்படுத்தி பேச விரும்பவில்லை, என்று புஜாரா பற்றிய கேள்விக்கு கோலி பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x