Last Updated : 01 Mar, 2020 04:58 PM

 

Published : 01 Mar 2020 04:58 PM
Last Updated : 01 Mar 2020 04:58 PM

"நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை": பும்ரா வெளிப்படை

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை செய்த நிலையில் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், தான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சூசகமாகத் தெரிவித்துள்ளார்

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இன்று நடந்த 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சால் நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்து 7 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

குறிப்பாக பும்ராவும், ஷமியும் சேர்ந்து 7விக்கெட்டுகளை வீழ்த்தினர். பந்துவீச்சாளர்கள் அமைத்துக்கொடுத்த வழியைப் பயன்படுத்தத்தெரியாமல் பேட்ஸ்மேன்கள் வாய்ப்பை வீணடித்துவிட்டனர். பொறுப்பற்ற முறையில் பேட்டிங் செய்து இன்றைய ஆட்டநேர முடிவில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர்

இதுகுறித்து வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், " இங்க பாருங்க, நான் யார் மீதும் குற்றம்சொல்ல விரும்பவில்லை. நம்முடைய அணியின் கலாச்சாரம், யாரையும் குறை சொல்வது அல்ல. சில நேரங்களில் பந்துவீச்சில் இருப்பவர்களால் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலை இருக்கும் அப்போது பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாக விளையாடி ரன்களைச் சேர்ப்பார்கள்.

தற்போது களத்தில் இருக்கும் ரிஷப்பந்த், ஹனுமா விஹாரி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அவர்கள் 3-வது நாளில் சிறப்பாக விளையாடுவார்கள்.

ஒரு அணியாக நாங்கள் கடினமாக உழைக்கிறோம், சூழலுக்கு ஏற்றார்போல் சிறப்பாகவும் விளையாடுகிறோம். களத்தில் இருக்கும் இரு பேட்ஸ்மேன்களும் நாளை சிறப்பாகச் செயலாற்றுவார்கள். கடினமாக முயல்வோம், உழைப்போம், எப்படிச் செல்கிறது என்று பார்ப்போம்.

நாம் நினைத்ததைக் காட்டிலும் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம், இதில் யார் மீதும் குறைசொல்லக்கூடாது. ஒன்றாக இணைந்து முயல்வோம்.

நான் ஏற்கனவே சொன்னதைப் போலத் தனிப்பட்ட வீரரின் செயல்பாடுகளைப் பார்ப்பதில்லை. சரியான வழியில் சரியாகச் செய்தால், நன்றாகப் பந்துவீச முடியும். சிலநேரங்களில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும். சிலநேரங்களில் நான் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்துவேன், சில நேரங்களில் முடியாது. என்னால் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றித்தான் சிந்திப்பேன்.

நான் செயல்படும் விதத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்து, என்னுடைய மனநிலை சரியில்லாமல் இருந்தால் அதை சரிசெய்யலாம். முடிவுகள் மீது கவனம் செலுத்துவதைவிட, கட்டுப்படுத்த முடிந்ததில் கவனம் செலுத்தலாம். பந்துவீச்சில் நாங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவோம், ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவோம் எதிரணிக்கு அழுத்தம் ஏற்படுத்துவோம். போதுமான வாய்ப்புகளை ஏற்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவோம்.

இவ்வாறு பும்ரா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x