Published : 27 Feb 2020 04:16 PM
Last Updated : 27 Feb 2020 04:16 PM

அஸ்வின் உட்கார வைக்கப்படுகிறார்? - பேட்டிங்கை வலுப்படுத்த லெவனில் ஜடேஜா ?

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நன்றாகத்தான் பந்து வீசினார், ஸ்பின்னர்களுக்கு ஒன்றுமேயில்லாத பிட்சில் அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் கொலின் டி கிராண்ட் ஹோம், கைல் ஜேமிசன் ஆகிய முக்கிய விக்கெட்டுகளும் அடங்கும்.

அவரது பந்து வீச்சு வெலிங்டன் நன்றாகவே இருந்தது, தனது கோணம், ட்ரிப்ட், ஸ்பின் மூலம் சில அரிய ஆச்சரியங்களை அவர் நியூஸி பேட்ஸ்மென்களிடத்தில் ஏற்படுத்தியதை மறுக்க முடியாது,

ஆனால் டாப் ஆர்டர் சொதப்பிய சொதப்பலில் தோற்று விட்டு அஸ்வினின் பேட்டிங்கை (0,4) குறைகூறி அவரை 2வது டெஸ்ட் போட்டியில் உட்கார வைப்பதற்கான பரிசீலனை நடைபெறுவதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பேட்டிங்கை வலுப்படுத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை களமிறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. சமீப காலங்களில் ஜடேஜா சிறப்பாக பேட் செய்து வருகிறார், டெஸ்ட் போட்டிகளில் பவுலிங்கில் டைட்டாக ஒரு முனையை சிக்கனப்படுத்தி ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் வல்லவராக இருக்கிறார். மேலும் அவரது பீல்டிங் பெரிய ஒரு சாதக அம்சமாகும், ஆனால் அஸ்வின் பந்து வீச்சை ஒப்பிடும் போது தர அளவில் ஜடேஜா வெளிநாடுகளில் அவ்வளவாக சோபிக்காதவர்.

இந்நிலையில் அஸ்வினை உட்கார வைக்க முடிவெடுத்தால் அது அஸ்வினுக்கு மிகவும் துரதிர்ஷ்டமே.

நியூஸிலாந்து பிட்ச்களில் பந்தை கொஞ்சம் தாமதமாகச் சந்திப்பதே பேட்டிங்கில் வெற்றியைக் கொடுக்கும். இறுக்கமான கைகளுடன் மட்டையை பந்து வரும்போது கொண்டு நீட்டக்கூடாது. இந்தியப் பிட்ச்களில் இப்படி ஆடினால் பந்து கவர் திசையில் செல்லும் ஆனால் அங்கெல்லாம் பந்து ஸ்லிப் திசைக்குச் செல்லும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை, ஆனாலும் இத்தனையாண்டுகால இந்தியப் பிட்ச் பழக்கம் தொற்று நோய் போல் தொடர்கிறது என்பதுதான் பிரச்சினை.

பந்தை தாமதமாக சந்தித்தல் என்றால் அதன் ஸ்விங்கின் போக்கை கணிப்பதாகும் மார்க் வாஹ், தற்போது கேன் வில்லியம்சன் பேட்டிங்கைப் பார்த்தால் நமக்குப்புரியும். பேக் அண்ட் அக்ராஸ் உத்தியில் துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால் பேக் அண்ட் அக்ராஸ் செல்லும் போது எல்.பி. ஆகிவிடுவோம் என்று அஞ்சக் கூடாது. பந்தை சாத்தக்கூடாது, டைமிங்தான் செய்ய வேண்டும்.

நியூஸிலாந்து அணியினர் நன்றாகத் திட்டமிடுகின்றனர், இந்திய பவுலர்கள் கொஞ்சம் ஃபுல் லெந்தில் வேகம் காட்டி ஸ்விங் செய்ய வேண்டும், பேக் ஆஃப் லெந்த்தில் வீசக்கூடாது. மொத்தத்தில் நிறைய சிந்தனையும் திட்டமிடுதலும் அவசியம்.

-தி இந்து ஸ்போர்ட்ஸ்டாரில் எஸ்.தினகர் என்பார் எழுதிய செய்தியின் தகவல்களுடன்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x