Published : 27 Feb 2020 08:09 AM
Last Updated : 27 Feb 2020 08:09 AM
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரை இறுதியின் முதற்கட்ட ஆட்டத்தில் சென்னையின் எப்சி -கோவா எப்சி வரும் 29-ம் தேதிசென்னை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் கோவாஎப்சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, பெங்களூரு எப்சி, சென்னையின் எப்சி ஆகியவை முறையே முதல்4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரை இறுதி சுற்றுக்கான அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.
இதன்படி இரு கட்டங்களாக அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. வரும் 29-ம் தேதிசென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் முதற்கட்ட அரை இறுதி ஆட்டத்தில் லீக் சுற்றில் 4-வது இடம் பிடித்த சென்னையின் எப்சி அணியானது, முதலிடம் பிடித்த கோவா எப்சி-யை எதிர்த்து விளையாடுகிறது. தொடர்ந்து இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட அரை இறுதியில் மார்ச் 7-ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை நடத்தும். இந்த ஆட்டம் கோவாவில் நடைபெறுகிறது.
இரு ஆட்டங்களிலும் அடிக்கப்படும் கோல்களின் சராசரி விகிதப்படி இறுதி சுற்றுக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும். இறுதி சுற்று மார்ச் 14-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது. மற்றொரு அரை இறுதியில் லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்த நடப்பு சாம்பியனான பெங்களூரு எப்சி, 2-வது இடம் பிடித்த அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மார்ச் 1-ம் தேதி பெங்களூருவில் மோதுகிறது.
இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட அரை இறுதியில் மார்ச் 8-ம் தேதி கொல்கத்தாவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டிக்கெட் விற்பனை
இதற்கிடையே 29-ம் தேதி சென்னையில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட்களை ரசிகர்கள் நேரு விளையாட்டரங்கில் உள்ள மையத்தில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT