

சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை இளம் இந்திய வீரர்கள் சமாளித்து மீண்டு வர அவர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் துணைபுரிகிறது என்று பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாஹித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார்.
“ஐபிஎல் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியுள்ளது. இந்திய அணியின் புதிய வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் உலகின் தரமான வீரர்களுடனும் எதிராகவும் பெரிய ரசிகர்கள் கூட்டம் முன்பு ஆடிப்பழகி வருவதால் சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை மிகச் சுலபமாகக் கையாண்டு விடுகின்றனர்.
ஐபிஎல் அவர்கள் கிரிக்கெட்டையே மாற்றி விட்டது, பாகிஸ்தான் சூப்பர் லீகும் இப்படி மாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். ஏற்கெனவே லீகிலிருந்து சில நல்ல வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
உலகின் டாப் வீரர்களுடன் ஆடியோ, எதிராக ஆடியோ பெரிய ரசிகர்கள் முன்னால் ஆடிப்பழகி விட்டால் சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை எளிதாகக் கையாள முடியும், புதிய இந்திய வீரர்களுக்கு இது நடந்துள்ளது, பாகிஸ்தானிலும் இது நிச்சயம் நடக்கும்” என்று ஷாகித் அஃப்ரீடி தெரிவித்தார்.