Published : 24 Feb 2020 07:30 AM
Last Updated : 24 Feb 2020 07:30 AM

சவுத்தி, போல்ட் பந்து வீச்சில் மடிந்தது இந்திய அணி: நியூஸிலாந்துக்கு 60 புள்ளிகளுடன் 100வது டெஸ்ட் வெற்றி

வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்திய அணி 144/4 என்று தொடங்கி சவுத்தி, போல்ட் ஆகியோரின் பிரமாதமான பந்து வீச்சில் 191 ரன்களுக்குச் சுருண்டது. வெற்றிக்கு தேவையான ரன்களை நியூஸிலாந்து அணி 1.4 ஓவர்களில் எடுத்து 9/0 என்று அபார வெற்றி பெற்று தொடரில் வீழ்த்த முடியாத 1-0 என்ற முன்னிலை பெற்றது.

இது நியூஸிலாந்து அணியின் 100வது டெஸ்ட் போட்டி, அதுவும் ராஸ் டெய்லரின் 100வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. உண்மையில் 3 நாட்களில் முடிந்ததாகத்தான் கருத வேண்டும். 2 இன்னிங்ஸ்களிலும் ‘நம்பர் 1’ ‘ஹைப்’இந்திய அணியினால் 200 ரன்களை எட்ட முடியவில்லை. 100 டெஸ்ட் வெற்றிகளில் 28 வெற்றிகள் சவுத்தி, போல்ட் ஆகியோரால் கிடைத்த வெற்றிகள். இந்தியா 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டை பிட்சில் வென்ற தொடர் வெற்றிக்கு தங்களது அயராத திட்டமிடல் மூலமும் அதனை செயல்படுத்துவதன் மூலமும் நியூஸி.அணி ஆப்பு வைத்தனர்.

144/4 என்ற நிலையில் புதிய பந்து எடுக்க இன்னமும் 15 ஓவர்களே இருக்கும் நிலையில் நிச்சயம் ரஹானேவுக்கும், விஹாரிக்கும் செட்டில் ஆக வாய்ப்பிருந்தது. ரஹானே ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்களில் இருந்த போது ட்ரெண்ட் போல்ட் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஒரு பந்தை பிட்ச் செய்து வெளியே எடுக்க ரஹானே எட்ஜ் செய்தார் வாட்லிங் தவறு செய்யவில்லை, வெளியேறினார் ரஹானே.

அதாவது உள்நாட்டில் சூரப்புலிகளான இந்திய வீரர்களை வெளிநாட்டில் எப்படி எளிதாகக் காலி செய்கின்றனர் என்பதற்கு உதாரணம் தான் ஹனுமா விஹாரி அவுட் ஆகும். முதலில் ஒரு ஃபுல் லெந்த் அவுட் ஸ்விங்கர், மீண்டும் ஒரு அவுட்ஸ்விங்கர், இதில் ஹனுமா விஹாரி பீட்டன் ஆனார், அடுத்த பந்து இன்ஸ்விங்கர் என்பதை எதிர்பார்ப்பதே சர்வதேச தரத்திலிருக்கும் வீரருக்கு அழகு. ஆனால் விஹாரி யோசிக்கவில்லை அதே இடத்தில் பிட்ச் ஆன பந்து ஒன்று உள்ளே ஸ்விங் ஆக பவுல்டு ஆனார் விஹாரி (15).

அஸ்வின் இறங்கி ஒரு பவுண்டரி அடித்து அதிக நேரம் நீடிக்கவில்லை, முதல் இன்னிங்சில் பிட்ச் ஆன பந்து எப்படி அவுட்ஸ்விங்கரில் பவுல்டு ஆனதோ அதே இடத்தில் பிட்ச் ஆன சவுத்தி பந்த் இம்முறை கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆனார். ரிவியூ செய்யவில்லை ஏனெனில் அது அம்பயர்ஸ் கால் ஆகிவிடும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

டாம் லேதம், சவுத்தி ஆகியோர் இஷாந்த் சர்மாவுக்கு கேட்ச் விட்டனர், ஆனால் கொலின் டி கிராண்ட் ஹோம் பந்துகள் பொதுவாக சறுக்கிக் கொண்டு செல்வது போல் இருக்கும் என்பதால் இஷாந்த் சர்மாவை எல்.பி.ஆக்கவே முயற்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார், இஷாந்த் சர்மா 12 ரன்களில் அவுட்.

ரிஷப் பந்த் சில நல்ல ஷாட்களை ஆடி 25 ரன்களுடன் இருந்த போது சவுத்தி பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து டீப்பில் போல்ட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பும்ரா டக் அவுட் ஆக, இந்திய அணி 191 ரன்களுக்குச் சுருண்டது. நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளையும் போல்ட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மயங்க் அகர்வால் கொஞ்சம் ரஹானே நீங்கலாக உலகின் நம்பர் 1 அணியில் ஒருவரும் தேறவில்லை. பவுலிங்கில் பும்ரா கவலையளிக்கும் விதமாக வீசி வருகிறார், நியூஸிலாந்தின் கடைசி 3 வீரர்கள் முதல் இன்னிங்சில் 215/7 என்ற நிலையிலிருந்து 123 ரன்கள் கூடுதலாகச் சேர்த்து 348 ரன்களை எடுக்க விட்டது கோலியின் ஆக்ரோஷமின்மையையே காட்டுகிறது. பும்ராவினால் டெய்ல் எண்டர்களை வீழ்த்த முடியவில்லை என்பது உண்மையில் கவலைக்குரிய அம்சமாகும். ஆட்ட நாயகன் டிம் சவுத்தி.

ரவி சாஸ்திரி தொடருக்கு முன்பாகக் கூறினார், உலகின் நம்பர் 1 அணி என்றால் அந்தத் தகுதிக்கேற்ப ஆடுவதே குறிக்கோள், இலக்கு என்றார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்கள் எடுக்க முடியாமல் ஆல் அவுட் ஆவதுதான் நம்பர் 1 போல் ஆடுவதா என்ற கேள்வி அவர் முன் வைக்கப்படும். டாஸ் ஒரு பொருட்டேயல்ல, டாஸை எல்லாம் கடந்து வந்து விட்டோம்... ஆச்சா போச்சா என்றெல்லாம் கூறிவந்த நம்பர் 1 இந்திய அணியின் நம்பர் 1 கேப்டன் விராட் கோலி கடைசியில் ஆட்டம் முடிந்த பிறகு “டாஸ் மிக முக்கியமானது” என்று கூறுகிறார் என்றால் தோல்வி அவரிடத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x