Published : 23 Feb 2020 09:53 AM
Last Updated : 23 Feb 2020 09:53 AM

பேட்டிங்கிலும் மிரட்டிய கைல் ஜேமிசன், போல்ட் அதிரடி: நியூஸி. 348 ரன்கள்- 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரைசதம்

வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 225/7 என்ற நிலையிலிருந்து இந்திய அணி நியூஸிலாந்தைக் கட்டுப்படுத்தத் தவறியது, இதனையடுத்து கைல் ஜேமிசன் (44), ட்ரெண்ட் போல்ட் (38) ஆகியோரின் அதிரடியினால் நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 348 ரன்கள் எடுத்தது.

183 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி தன் 2வது இன்னிங்சில் தேநீர் இடைவேளையின் போது ஷா, புஜாரா விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.

கொலின் டி கிராண்ட் ஹோம் (43), கைல் ஜேமிசன் இணைந்து 71 ரன்கள் கூட்டணி அமைக்க, ஜேமிசன் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 44 ரன்களை 45 பந்துகளில் எடுத்து அறிமுகப் போட்டியில் ஆடும் நம்பர் 9 வீரரின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவர் புண்ணை ஏற்படுத்தினார் என்றால் போல்ட் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி 24 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 348 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், ஷமி ஒருவிக்கெட்டையும் பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்று தொடங்கிய போது பும்ரா வீசிய முதல் பந்தே எகிற பந்து வாட்லிங்கின் மட்டை விளிம்பில் பட்டு பந்த்திடம் கேட்ச் ஆனது, பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 294 பந்துகளுக்குப் பிறகு விக்கெட்டைக் கைப்பற்றினார். டிம் சவுத்தி 6 ரன்களில் இஷாந்த் சர்மா பந்தை லெக் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

புதிய பந்து எடுப்பதற்கு அருகில் இருந்தது இந்திய அணி ஆனால் கொலின் டி கிராண்ட் ஹோம் திடீரென இஷாந்த் சர்மாவை மிட் ஆஃப் மேல் தூக்கி பவுண்டரி அடிக்க, முகமட் ஷமி பந்தை ஜேமிசன் புல் ஷாட்டில் சிக்சருக்குப் பறக்க விட்டார். புதிய பந்தில் பும்ரா நேராகவும் புல் லெந்திலும் வீசியதில் புதிய பந்தின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் கொடுத்தார்.

ஜேமிசன் முன் கால், பின் கால் இரண்டிலும் பிரமாதமாக ஆடினார். ஷமி இந்தப் போட்டியில் சரியாக வீசவில்லை, 5 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தார். அஸ்வின் கொண்டு வரப்பட்டார் ஆனால் ஜேமிசன் 2 சிக்சர்களை விளாசியதுதான் நடந்தது. ஆனால் அஸ்வின் சாமர்த்தியமாக ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய போது ஜேமிசன் 3வது சிக்சர் அடிக்கும் முயற்சியில் லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார், ஆனால் இந்திய அணியை மிரட்டி விட்டார் அவர்.

சவுத்தி ஆட்டமிழந்த பிறகு போல்ட் இறங்கி ஒதுங்கிக் கொண்டு ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து விளாசத் தொடங்கினார், இந்திய அணியினால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் இஷாந்த் சர்மா ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பவுன்சரை வீசி போல்ட்டை வீழ்த்தினார். நியூஸிலாந்து 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் 2வது இன்னிங்சில் பிரிதிவி ஷாவை திட்டம் போட்டு காலி செய்தனர். போல்ட் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஷார்ட் பிட்சாக வீச ஷா சற்றே அதிர்ச்சியடைந்து தடுத்தாட முயன்றார் ஆனால் பந்து பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் டாம் லேதம் டைவ் அடித்துக் கேட்ச் எடுத்தார். புஜாரா போல்ட்டின் பந்தை ஆடாமல் விட்டு பெரிய தவறு செய்ய பவுல்டு ஆகி வெளியேறினார்.

தற்போது அகர்வால் 54 ரன்களுடனும் விராட் கோலி 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், இந்திய அணி 90/2.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x