Last Updated : 22 Feb, 2020 04:35 PM

 

Published : 22 Feb 2020 04:35 PM
Last Updated : 22 Feb 2020 04:35 PM

மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய இசாந்த் சர்மா; வலு சேர்த்த வில்லியம்ஸன்: முதல் இன்னிங்ஸில் நியூஸி. 51 ரன்கள் முன்னிலை

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா : படம் உதவி | ட்விட்டர்.

வெலிங்டன்,

கேப்டன் கேன் வில்லியம்ஸனின் அபாரமான ஆட்டத்தால் வெலிங்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2-வது நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் வாட்லிங் 14 ரன்களுடனும், கிராண்ட்ஹோம் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியைப் பொறுத்தவரை காயத்திலிருந்து மீண்டு வந்த இசாந்த் சர்மா தனது வழக்கமான பந்துவீச்சுக்குத் திரும்பினார். இசாந்த் சர்மாவின் ஆவேசமான பவுன்ஸர், ஸ்விங் பந்துவீச்சு அவருக்கு 3 விக்கெட்டுகளைப் பெற்றுக்கொடுத்தன. அவருக்குத் துணையாக இருந்த ஷமி ஒரு விக்கெட்டையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பும்ராவின் பந்துவீச்சைக் கூட நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடினார்கள். ஆனால், இசாந்த் சர்மாவின் வேகப்பந்துவீச்சைத் தொடுவதற்கே அஞ்சினர். 15 ஓவர்கள் வீசிய இசாந்த் சர்மா 3 மெய்டன்களுடன் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து அணியும் தனது முதல் இன்னிங்ஸில் டாப்-5 பேட்ஸ்மேன்களை இழந்து இக்கட்டான நிலையில் இருக்கிறது. தற்போது களத்தில் நிற்கும் கிராண்ட் ஹோம், வாட்லிங் தவிர்த்து அடுத்து நிலைத்து நின்று பேட்டிங் செய்யக்கூடிய அளவுக்கு பின்வரிசையில் யாரும் இல்லை.

ஆனால் 3-வது நாளிலில் இருந்து வெலிங்டன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்குத் தொடங்கிவிடும் என்பதால், நாளை 3-வது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்துவது அவசியமாகும்.

150 ரன்களுக்கு மேல் நியூஸிலாந்து அணி முன்னிலை பெற்றால், 2-வது இன்னிங்ஸில் இந்திய அணிக்குப் பெரும் நெருக்கடி ஏற்படலாம். ஆதலால், நாளை ஆட்டம் தொடங்கி முதல் செஷனுக்குள்ளே நியூஸிலாந்து வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வது ஆட்டம் நியூஸி. பக்கம் நகராமல் தடுக்கும்.

நியூஸிலாந்து வீரர்கள் பிளென்டெல், டாம் லாதம் ஆட்டத்தைத் தொடங்கினர். உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் விழாமல் தவிர்த்தனர். ஆனால், உணவு இடைவேளைக்குப் பின், இசாந்த் சர்மா பந்துவீச்சில் 11 ரன்களில் லாதம், ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த கேப்டன் வில்லியம்ஸன், பிளென்டெலுடன் சேர்ந்து நிதானமாக ஆடினார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பிளென்டெல் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது இசாந்த் சர்மா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார்.

3-வது விக்கெட்டுக்கு டெய்லர், வில்லியம்ஸன் கூட்டணி ஆட்டத்தை மெதுவாக நகர்த்தியது. அனுபவம் வாய்ந்த இரு பேட்ஸ்மேன்களும் எளிதாக ரன்களைச் சேர்த்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டு சென்றனர்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஒரு ரன் அதிகமாக நியூஸிலாந்து எடுத்த நிலையில் 3-வது விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் இசாந்த் சர்மா வீசிய பந்தில் ஷார்ட் லெக் திசையில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து டெய்லர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹென்றி நிகோலஸ், வில்லியம்ஸனுடன் சேர்ந்து வலிமையான கூட்டணி அமைக்க முயன்றார். ஆனால் அஸ்வின் பந்துவீச்சில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து, நிகோலஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக ஆடிவந்த வில்லியம்ஸன் 89 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷமி பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 46 ரன்களும், அகர்வால் 34 ரன்களும் சேர்த்தனர். நியூஸிலாந்து தரப்பில் ஜேமிஸன், சவுதி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x