Published : 21 Feb 2020 09:05 AM
Last Updated : 21 Feb 2020 09:05 AM
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் இந்தியாவின் திவ்யா கரன், சரிதா மோர், பிங்கி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் திவ்யா கரன் 6-4 என்ற கணக்கில் ஜப்பானின் நருஹா மாட்சுயுகியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 59 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் சரிதா மோர் 3-2 மங்கோலியாவின் அட்லாண்ட்செட்செக்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.
அதே வேளையில் 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி 2-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் துல்குன் போலோர்மாவை தோற்கடித்து தங்கம் வென்றார். 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிர்மலா தேவி வெள்ளிப் பதக்கம் பெற்றார். இறுதி சுற்றில்நிர்மலா தேவி 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் யக்சிமுரடோவாவிடம் தோல்வி கண்டார்.
மகளிர் பிரிவில் மட்டும் நேற்று நடைபெற்ற 5 பிரிவுகளில் இந்திய அணி 4 பதக்கங்களை வேட்டையாடியது.
76 கிலோ எடைப் பிரிவில் கிரண் மட்டுமே பதக்கம் கைப்பற்றத் தவறினார். ஆசிய சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் இந்திய அணி அதிக தங்கப் பதக்கத்தை கைப்பற்றுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு கிர்கிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக மகளிர்பிரிவில் ஒரு தங்கம் மட்டுமே இந்தியா வென்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT