

13-வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளிலும் இருக்கும் நட்சத்திர வீரர்களைக் கொண்டு ஆல் ஸ்டார் கேம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தநிலையில் அதற்கு அணி நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதனால், ஆல்-ஸ்டார் கேம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்த போட்டியை மார்ச் 25-ம் தேதி நடத்த மிகுந்த ஆவலாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஆனால், அணி நிர்வாகிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்
இதுகுறித்து ஐபிஎல் அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்கும் வகையில் ஒரு போட்டியை நடத்த மார்ச் 25-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், அவ்வாறு நடத்தும் போது, முதல்நாளே அனைத்து வீரர்களும் அங்கு வரவேண்டும், அதன்பின் போட்டியை முடித்து விட்டு 26-ம் தேதி செல்ல வேண்டும், 29-ம் தேதி ஐபிஎல் சீசன் தொடங்கிவிடும். நிச்சயம் இது ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதை அணியின் நிர்வாகிகளும் விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்
மற்றொரு அதிகாரி கூறுகையில், " முக்கியமான வீரர்கள் பங்கேற்கும் போட்டி என்பதால், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்பார்கள். இதில் எந்த முக்கிய வீரருக்கும் காயம் ஏற்பட்டுவிட்டால், அந்த சீசன் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிடும். மேலும், இந்த போட்டி விளையாடுவதால் எந்த அணிக்கும் எந்தவிதமான புள்ளிகளும் கிடைக்கப் போவதில்லை. ஆதலால், எதற்காக விளையாட வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்" எனத் தெரிவித்தார்
ஆதலால், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் கனவுப்போட்டியான ஆல்-ஸ்டார் கேம் இந்த முறை நடைபெறுவதற்குப் பெருமளவு சாத்தியங்கள் குறைவு என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன