Published : 13 Feb 2020 05:14 PM
Last Updated : 13 Feb 2020 05:14 PM

விக்கெட் வீழ்த்துபவர்களைக் கண்டால் தேர்வுக்குழுவுக்கு பிடிக்கவில்லை: அஸ்வின் நீக்கம் பற்றி ஐபில் அணி உரிமையாளர் கடும் தாக்கு

அஸ்வினை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணித்தேர்வுக்குழுவினர் புறக்கணித்து வருவது குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் காட்டமாக விமர்சனத்தை முன்வைத்தார்.

அதே போல் ரிஷப் பந்த்தையும் இவ்வாறு உட்கார வைப்பது தனக்குப் புதிராக இருப்பதாக பார்த் ஜிண்டால் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர் ட்வீட்களை மேற்கொண்டார்.

அதில் ஒரு ட்வீட்டில், “அஸ்வின் ஏன் இந்த இந்திய அணியில் இல்லை? விக்கெட்டுகளை எடுப்பவர்களைக் கண்டால் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. டி20 ஒயிட்வாஷ் தோல்விக்குப் பிறகு நியூஸிலாந்து அணியினர் ஒருநாள் தொடரில் தங்கள் ஒயிட்வாஷ் மூலம் உலகக்கோப்பை 2019 அரையிறுதி வெற்றி ஒன்றும் அதிர்ஷ்டம் அல்ல என்பதைக் காட்டி விட்டனர். இந்திய அணிக்குத் தேவை விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களும் புதிராக வீசி திடீர் திருப்பங்களை ஏற்படுத்துபவர்களும்தான்” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் இன்னொரு ட்வீட்டில் “பெஞ்சில் அமர வைப்பதற்காக எதற்காக ரிஷ்ப பந்த்தை அழைத்துச் செல்ல வேண்டும்? நிச்சயமாக அவர் ஏ தொடரிலோ, உள்நாட்டு தொடரிலோ ஆடி பயன்பெற்றிருப்பார். பந்த்தைப் போல் திறமை வாய்ந்த ஒரு வீரரை 5வது டி20 போட்டியிலும் தற்போது 3வது ஒருநாள் போட்டியிலும் ஆடாமல் செய்திருப்பது பொருளற்றதாகும்” என்றார்.

அஸ்வின் கடைசியாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றது ஜூன் 2017-ல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-டீம் ஸ்போர்ட்ஸ்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x