Last Updated : 11 Feb, 2020 05:20 PM

 

Published : 11 Feb 2020 05:20 PM
Last Updated : 11 Feb 2020 05:20 PM

ஒயிட்வாஷ் தோல்வியில் சீரியஸாக யோசிப்பதற்கு ஒன்றும் இல்லையாம், சொல்கிறார் சாஹல்

ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக சீராக வெற்றிகளைக் குவித்து வருகிறது எனவே இந்த ஒயிட்வாஷ் தோல்வியை சீரியசாக எடுத்துக் கொள்ள ஒன்றுமில்லை என்று லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரச்சினை இதுவல்ல இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது என்றால் டி20 5-0 ஒயிட் வாஷ் வெற்றியையும் ஊதிப் பெருக்கக் கூடாது என்பதே சாஹல் கூற்றுக்கு எதிரான நம் விமர்சனமாக இருக்க முடியும். தேர்தலில் மண்ணைக்கவ்வும் அரசியல் கட்சிகள் பேசுவது போல் பேச கிரிக்கெட் இடமல்ல என்பதை சாஹலுக்கும் கோலிக்கும் யாரேனும் புரிய வைத்தால் நல்லது.

1989-க்குப் பிறகு இந்தியா விராட் கோலி தலைமையில் ஒயிட்வாஷ் வாங்கியுள்ளது, பீல்டிங் மோசம், பும்ரா பந்து வீச்சு ஒன்றுமில்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது, அதுவும் உதவிகரமான பிட்ச்களில் என்பது சீரியசானது இல்லையா?

சாஹல் கூறுவதைப் பார்ப்போம், “கடந்த 4-5 ஆண்டுகளில் 4 அல்லது 5வது ஒருநாள் தொடர் இழப்புத்தான். ஒவ்வொர் போட்டியையும் வெல்ல முடியாது. ஒரு தொடரை வென்றோம் இன்னொன்றில் தோற்றோம், எனவே இதனை சீரியசாக யோசிக்க எதுவும் இல்லை.

பிரித்வி ஷா, அகர்வால் அணிக்குள் வந்திருக்கின்றனர், இளம் வீரர்கள் இந்தியாவுக்கு வெளியே ஆட வேண்டும். நியூஸிலாந்தில் ஆடுவது சுலபமல்ல. மொத்தமாகப் பார்த்தால் இது ஒருநாள் தொடர்தான். டி20 தொடரை 5-0 என்று வென்றிருக்கிறோமே.

நியூஸிலாந்து அணி அசாதாரணமாக ஆடினர். அதை நாம் பாராட்டத்தான் வேண்டும், மோசமான பீல்டிங் சில வேளைகளில் நிகழும், 10 தொடர்களுக்கு ஒருமுறைதான் பீல்டிங் மோசமாக இருக்கும், அடுத்த ஒருநாள் தொடருக்கு இன்னும் காலம் உள்ளது. எனவே பலவீனங்களைக் களைய முடியும்.

ஏன் குல்தீப், நான் உலகக்கோப்பைக்குப் பிறகு சேர்ந்து ஆடவில்லை என்றால் ஜடேஜா அருமையாக ஆடுகிறார், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அசத்தி வருகிறார். எனவே போட்டிகளை நானும் குல்தீப்பும் பிரித்துக் கொண்டுள்ளோம். பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருந்தால், அனைவரும் மீண்டும் சேர்ந்து ஆட வாய்ப்புக் கிடைக்கும்.

கப்தில் விக்கெட் எனது சிறந்த பந்துகளில் ஒன்று. என் பந்துகளில் நிறைய ட்ரிஃப்ட் இருக்கும், அது கால்காப்பைத் தாக்கும், நான் ஒரு கோணத்திலிருந்து வந்து வீசினேன், பந்து இப்படித் திரும்பும் என்ரு நான் நினைக்கவில்லை. ஆனால் என் வலுவான பகுதிகளில் நான் வீசினேன்.

விக்கெட் எடுத்த பிறகு நான் ஏன் கட் செய்யப்பட்டேன் என்றால் குறைந்த ஓவர் ஸ்பெல் என்பது நாங்கள் திட்டமிட்ட ஒன்று. ஜடேஜாவும் வீசியாக வேண்டும், நாங்கள் 2 ஸ்பின்னர்கள்தானே இருக்கிறோம். 2-3 ஒவர்களை கடைசிக்காக வைத்துக் கொண்டு கொடுக்கும் போது விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே திட்டம்” என்றார் சாஹல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x