Published : 08 Feb 2020 01:21 PM
Last Updated : 08 Feb 2020 01:21 PM

விராட் கோலிக்கு பிரமாதமாக வியூகம் அமைத்து பொறியில் சிக்க வைத்த நியூஸி. - தொடர்ந்து 2வது முறையாக பவுல்டு ஆனது எப்படி?

ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் தொடரில் நீடிக்க வேண்டுமெனில் இந்திய அணி இன்னும் 202 ரன்களை 37.2 ஒவர்களில் எடுக்க வேண்டும், ரன் விகிதம் பிரச்சினையல்ல, ஆனால் இந்தப் பிட்சில் திடீரென பந்துகள் காற்றிலும் பிட்ச் ஆன பின்பும் ஸ்விங் ஆகி வருகிறது.

பொதுவாக இடுப்புக்குக் கீழ் பந்துகள் வந்தால் வீரதீர வாள் சுழற்றிகளான நம் வீரர்கள் கொஞ்சம் ஸ்விங், இடுப்புக்கு மேல் கொஞ்சம் பவுன்ஸ் ஆனால் சிரமப்படுவது வழக்கம்தான்.

இன்று பிரிதிவி ஷா தொடக்கத்தில் பவுண்டரிகளிலேயே டீல் செய்தார், அவர் எடுத்த 24 ரன்களில் அனைத்துமே பிரமாதமான 6 பவுண்டரிகல் மூலம் வந்தவையே. ஆனால் அறிமுக பவுலர் கைல் ஜேமிஸன் அதிக உயரமானவர், அவர் சொந்த மைதானம் வேறு, பந்தை எங்கு பிட்ச் செய்து எப்படி வெளியே எடுக்க வேண்டும் என்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் போலும்.

பிரித்வி ஷாவுக்கு சற்றே வைட் ஆஃப் த கிரீஸிலிருந்து பந்தை உள்ளே கொண்டு வந்தார், முன் காலை நீட்டிய ஷா, மட்டைக்கும் காலுக்கும் இடையே வண்டி செல்லும் அளவுக்கு இடைவெளி கொடுத்ததால் பவுல்டு ஆனார், உண்மையில் பேக் அண்ட் அக்ராஸ் சென்று ஸ்டம்பை கவர் செய்து ஆட வேண்டிய பந்து, ஆனால் ஷா பவுல்டு ஆனார்.

விராட் கோலி இன்று இறங்கியது முதலே அவரது வழக்கமான ஸ்கோரிங்கை செய்ய விடாமல் நியூஸிலாந்து அருமையாக களவியூகம் அமைத்தனர்.

மூன்று ஸ்லிப்களை கோலிக்கு முதலில் வைத்து அவுட்ஸ்விங்கரில் அவரை கவர் ட்ரைவ் ஆட வைக்கும் முயற்சியில் எட்ஜ் ஆகும் வாய்ப்பை உருவாக்கினர், இதனால் கோலியின் கவர் ட்ரைவையும் ஆட முடியாமல் முடக்கப் பட்டார், பிறகும் 2 ஸ்லிப்கள் கோலிக்கு இருந்தன. முதல் 20 பந்துகளுக்கு கோலிக்கு 2 ஸ்லிப்கள் இருந்தன.

இந்தக் காலக்கட்டம்தான் எப்படிப்பட்ட பேட்ஸ்மெனும் படிந்து விடுவார்கள், சச்சின் டெண்டுல்கரை டியான் நேஷ் என்ற ஒரு நியூஸி. பவுலர் இவ்வாறு முடக்கி வீழ்த்தியுள்ளார் அதே போல் தென் ஆப்பிரிக்காவின் ஹேன்சி குரோனியே சச்சினை சில முறை இவ்வாறு முடக்கி வீழ்த்தியுள்ளார்.

இன்று கோலிக்கு அதனை நியூஸிலாந்து பவுலர்கள் செய்தனர். கோலியின் கவர் ட்ரைவை முடக்கவே, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தையும் கோலி பிளிக் ஆஇ ஆன் திசைக்கு அனுப்ப முயன்றதில் ஓரிருமுறை பிளிக் ஆடும் போது முன்பக்கமாக கவிழ நேரிட்டது.

ஒருமுறை கால்காப்பில் வாங்கி முறையீடு எழுந்தது, அது அவுட், ஆனால் பந்து மட்டையில் பட்டதாக டாம் லேதம் மேல்முறையீட்டைத் தவிர்த்தார் பந்து கால்காப்பில் மட்டுமே பட்டது, மட்டையில் படவில்லை என்பது ரீப்ளேயில் தெரிந்தது. கோலிக்கு நடுவர் எல்.பி.கொடுக்க மறுக்கும் போக்கு தொடர்கிறது!

மேலும் சவுதி, தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் போல் சிலபல அவுட்ஸ்விங்க்கர்கள் மூலம் கோலியை சோதித்த பிறகு வைட் ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார். மீண்டும் கோலி பிளிக் ஆட முயன்று முன்பக்கமாக சற்றே கவிழ்ந்தார் பேட்-கால்காப்பு இடையில் பந்து புகுந்து குச்சியைப் பதம் பார்த்தது. கோலி 25 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் என்று வெளியேறினார்.

முதல் போட்டியில் இஷ் சோதியின் கூக்ளிக்கு பவுல்டு ஆன கோலி, இப்போது சவுதியின் இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆகியுள்ளார், உள்ளே வரும் பந்துகளுக்கு அவரிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது, எதிரணியின் வியூகங்களை, அமைக்கும் பொறிகளை அவர் சரிவர புரிந்து கொள்வதில்லை என்பதற்கு நிறைய உதாரணங்களில் இன்றைய பவுல்டும் ஒன்று.

இந்திய அணி 17.3 ஓவர்களில் 83/4 என்று தடுமாறி வருகிறது. ஜாதவ், அய்யர் கிரீசில் இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x