Last Updated : 06 Feb, 2020 06:24 PM

 

Published : 06 Feb 2020 06:24 PM
Last Updated : 06 Feb 2020 06:24 PM

நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன்; அவரின் தலைமையை யாரும் கேள்வி கேட்க முடியாது: எம்எஸ்கே பிரசாத் பளிச் பேட்டி

நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். இருந்தபோதிலும், அணியின் வளர்ச்சிக்காக தோனி மட்டுமல்லாமல், இளைஞர்களுக்குத்தான் அதிகமான வாய்ப்பு வழங்குவதுதான் எனது கடமை என்று இந்திய அணி தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் ஓய்வு பெற்ற நிலையில் 'தி ஸ்போர்ட்ஸ்டார்' இதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இளைஞர்களுக்குத்தான் அதிகமான வாய்ப்புகளை வழங்குகிறோம். அவர்கள் நன்றாக செட்டில் ஆகி நீண்ட காலத்தில் விளையாட நினைக்கிறோம்.

மகேந்திர சிங் தோனி அவருடைய முடிவை அவர் எடுப்பார். தேர்வுக்குழுத் தலைவராக இருந்த வரை என் பணி தவிர்த்துப் பார்த்தால், நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரின் தலைமையில் இந்திய அணி 2 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் என சாதித்துள்ளது. ஆதலால் தோனியின் தலைமையை யாரும் கேள்வி கேட்க முடியாது.

ஆனால், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை தோனிதான் முடிவெடுக்கவேண்டும். தேர்வுக் குழுத் தலைவராக, தோனிக்கு அடுத்து, அடுத்த தலைமுறை வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்புகளை வழங்கிட வேண்டும்.

என்னுடைய காலத்தில் ரோஹித் சர்மா நல்ல வீரராக உருமாறினார். அணியில் தனக்கென நல்ல இடத்தை தக்கவைத்தார். அவரின் மாற்றத்தை, முன்னேற்றத்தை நாம் உணருவது கடினம்தான், வியப்புக்குரியதுதான்.

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராகவும் விளையாட முடியும் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்துள்ளார். அவருக்கு வெளிநாடுகளிலும் இதேபோன்ற பேட்டிங் சூழல் அமைந்தது.

இந்திய அணியில் 4-வது இடத்துக்குக் கண்டுபிடிக்கப்பட்ட வீரர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரேயாஸ் அய்யர். விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தும் அவர் சரியாக விளையாடவில்லை. டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி தனக்குரிய இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

அம்பதி ராயுடுவை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே பயணத்துக்குப் பின் நாங்கள் ராயுடு மீது கவனம் செலுத்தி வந்தோம். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஏன் நீங்கள் கவனம் செலுத்தக்கூடாது என்று ராயுடுவிடம் பேசினோம். ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பொறுத்துதான் உங்களை ஒருநாள் போட்டிக்குத் தேர்வு செய்தோம். ஆனால், அனைவருக்கும் இதை பொருத்திப் பார்க்க முடியாது என்றோம்.

என்சிஏவில் ஒருமாதம் ராயுடுவுக்குப் பயிற்சி அளித்து அவரின் உடல் தகுதியைச் சோதித்தோம். ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், உலகக்கோப்பை அணிக்கான தேர்வில் அவரைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்தும் அவரைத் தேர்வு முடியாமல் போனதுதான் என்னை வேதனைப்படுத்தியது. அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்''.

இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.

தவறவிடாதீர்கள்..

'டியூப்லைட் இப்படித்தான் வேலை பார்க்கும்' - பிரமதர் மோடி கிண்டல் | 'திசை திருப்புகிறார் பிரதமர்' - ராகுல் காந்தி சாடல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x