Published : 31 Jan 2020 06:47 PM
Last Updated : 31 Jan 2020 06:47 PM
வெலிங்டனில் நடைபெற்ற மீண்டுமொரு த்ரில் டி20 போட்டி சமன் எய்த, சூப்பர் ஓவருக்குச் சென்று இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
159/3 என்று இருந்த நியூஸிலாந்து கடைசி ஷர்துல் தாக்கூர் ஓவரில் சொதப்பி 6 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழக்க ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவர் சென்றது, அதில் நியூஸிலாந்து 13 ரன்கள் எடுக்க, இந்திய அணி எளிதில் வென்றது.
தொடர்ச்சியாக 2 சூப்பர் ஓவர் மேட்ச்சில், நியூஸிலாந்து அணி கடைசி நேரத்தில் சொதப்பி தென் ஆப்பிரிக்கா போல் ‘சோக்கர்ஸ்’ ஆகினர். உலகக்கோப்பை சூப்பர் ஓவர் தோல்வி அந்த அணியை மன ரீதியாக எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் சூப்பர் ஓவரில் சாம்சன், ராகுல்தான் இறங்குவதாக இருந்ததை ராகுல்தான் மாற்றினார் என்றும் கோலி இறங்க வேண்டும் என்று கூறியதாகவும் கோலியே தெரிவித்தார்.
ஆட்டம் முடிந்து கோலி கூறியதாவது:
கடந்த இரண்டு ‘டை’ ஆட்டங்களிலிருந்து புதிதான ஒன்றைக் கற்றுக் கொண்டுள்ளேன். எதிரணியினர் நன்றாக ஆடும்போது பொறுமை காத்து கடைசியில் மீண்டெழும் வாய்ப்பைத்தான் கூறுகிறேன்.
இது போன்ற விறுவிறுப்பான ஆட்டங்களை ஆடுவதில் மகிழ்ச்சி. இதற்கு முன்பாக சூப்பர் ஓவரில் ஆடியதில்லை, ஆனால் இப்போது தொடர்ச்சியாக 2 சூப்பர் ஓவரில் வென்றுள்ளோம். இது அணியின் குணாம்சத்தை வெளிப்படுத்துகிறது.
சூப்பர் ஓவரில் சாம்சனையும் ராகுலையும் தான் அனுப்புவதாக இருந்தோம், ஆனால் ராகுல் என்னிடம் நான் (கோலி) இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என் அனுபவமும், நான் ஆடும் விதமும் உதவும் என்றார், இதனையடுத்தே நானும் ராகுலும் இறங்கினோம், ராகுலின் 2 அடி முக்கியமாக அமைந்தது, தொடக்கத்தில் சஞ்சு ஒரு அச்சமற்ற வீரர்.
சைனி மீண்டும் வேகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். இப்படிப்பட்ட வெற்றிகள் பெருமையளிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT