Published : 25 Jan 2020 08:26 PM
Last Updated : 25 Jan 2020 08:26 PM
கிரிக்கெட் உலகிலேயே முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் 5 லட்சம் ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து இந்த சாதனையை நிகழ்த்தியது.
ஜோகன்ஸ்பெர்க் நகரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஒரு ரன் சேர்த்த போது இங்கிலாந்து அணி 1,022 டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5லட்சம் ரன்களை குவித்த அணி என்ற பெருமையையும் சாதனையையும் பெற்றது.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இங்கிலாந்து 2 போட்டியில் வென்று முன்னணியில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால்தான் தொடரை இழக்காமல் சமன் செய்யமுடியும். அதேசமயம், இங்கிலாந்து அணி சமன் செய்தாலே தொடரை வென்றுவிடும். கடும் நெருக்கடியுடன் தென் ஆப்பிரிக்கா பேட் செய்து வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி 830 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 லட்சத்து 32 ஆயிரத்து 706 ரன்கள்சேர்த்துள்ளது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி 540 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 லட்சத்து 73 ஆயிரத்து 518 ரன்கள் சேர்த்துள்ளது. 4-வது இடத்தில் மே.இ.தீவுகள் அணி 545 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2லட்சத்து 70 ஆயிரத்து 441 ரன்கள் சேர்த்துள்ளது.
அதுமட்டுல்லாமல் போர்ட் எலிசபெத் நகரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிவிளையாடியதன் மூலம் வெளி நாடுகளில் சென்று 500 போட்டிகள் விளையாடிய அணி எனும் பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வெளிநாடுகளில் சென்று 268 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.அதில் 51 போட்டிகளில் வெற்றியும், 113 போட்டிகளில் தோல்வியும், 104 போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT