Published : 25 Jan 2020 07:28 PM
Last Updated : 25 Jan 2020 07:28 PM

நார்ட்யே அபாரப் பந்துவீச்சில் சரிந்த இங்கிலாந்தை தூக்கி நிறுத்திய பின்வரிசை வீரர்கள்: 400 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஜொஹான்னஸ்பர்கில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான சனிக்கிழமையன்று இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்ட்டியே 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல் நாளான நேற்று 192/4 என்று முடிந்தது இங்கிலாந்து. கிராலி, சிப்லி ஆகிய தொடக்க வீரர்கள் 107 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர்.

ஆனால் அதன் பிறகு 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து, டாம் சிப்லி (44), கிராலி(66), ஜோ டென்லி (27), பென் ஸ்டோக்ஸ் (2) ஆகியோர் தேநீர் இடைவேளைக்குப் பிறகு வரிசையாக ஆட்டமிழந்து வெளியேற இங்கிலாந்து முதல் நாளில் 192/4 என்று முடிந்தது.

2ம் நாளான இன்று ரூட் (59), ஆலி போப் (56) ஆகியோர் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 101 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நார்ட்யே அபாரமாக வீசி ஜோ ரூட், போப் இருவரையும் வீட்டுக்கு அனுப்பினார். இவர்களுடன் சாம் கரணையும் கோல்டன் டக் அவுட் ஆக்கினார். 11 ரன்களில் 3 விக்கெட்டுகளை சடுதியில் இழந்து இங்கிலாந்து 269/7 என்று ஆனது. பிறகு உணவு இடைவேளையை 300/7 என்று நிறைவு செய்தது.

ரூட், கரன் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய நார்ட்யேவின் ஹாட்ரிக் வாய்ப்பை கிறிஸ் வோக்ஸ் முறியடித்தார்.

தென் ஆப்பிரிக்க அணி இதனைப் பயன்படுத்தி 320 ரன்களுக்குள் இங்கிலாந்தைச் சுருட்டத் தவறியது, காரணம் கிறிஸ் வோக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களை எடுக்க, மார்க் உட் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, ஸ்டூவர்ட் பிராட் சரவெடி இன்னிங்சில் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் விளாச இங்கிலாந்து 400 ரன்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பை கிட்டத்தட்ட இங்கிலாந்து முறியடித்து விட்டது என்றே கூறலாம். தற்போது ஆக மந்தமாக ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா 12 ஓவர்களில் 11/0 என்று ஆடி வருகிறது. இன்று இன்னமும் 38 ஓவர்கள் மீதமுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x