Published : 25 Jan 2020 03:53 PM
Last Updated : 25 Jan 2020 03:53 PM
இங்கிலாந்து கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பார்வையாளர் ஒருவர் தன்னை ஆங்கிலப் பாடகர் எட் ஷீரனுடன் ஒப்பிட்டதைப் பொறுக்க முடியாமல் அவர் மீது கடும் வசைமாரி பொழிந்தது பென் ஸ்டோக்ஸ் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டாக மாறியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் மன்னிப்புக் கேட்டாலும் அவர் மீது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது, அதில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து பெவிலியன் சென்ற போது பார்வையாளர் ஒருவர் பாடகர் எட் ஷீரன் என்பவருடன் ஸ்டோக்ஸை ஒப்பிட்டு ஏதோ வார்த்தைகளை உதிர்க்க, பென் ஸ்டோக்ஸ் ஆத்திரம் அடைந்து, ‘மைதானத்துக்கு வெளியே வந்து இதைக் கூறிப்பார் யூ...’ என்று கடும் கெட்ட வார்த்தைகளை அவர்மீது பிரயோகித்ததாக புகார் எழுந்தது.
ஸ்டோக்ஸ் அவ்வாறு கூறியதை போட்டியின் நேரடி ஒளிபரப்பாளர்கள் சரியாகப்பிடித்து விட்டனர். இது உடனே சமூகவலைத்தளக் காலம் என்பதால் பலவாறு பரவியது. பார்வையாளர் வசை போன்று எதையும் சொல்லவில்லை, பாட்கார் ஷீரன் போல் இருக்கிறீர்கள் என்று கூறியதாகவே தெரிகிறது.
இந்நிலையில் சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரிய பென் ஸ்டோக்ஸ், “நான் ஆட்டமிழந்து செல்லும் போது நான் அவரை நோக்கிப் பிரயோகித்த மொழிக்காக வருந்துகிறேன், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ஆட்டமிழந்து வெளியே செல்லும் போது ரசிகர்களில் ஒரு பகுதியினர் என்னை நோக்கி தவறான வார்த்தைகளை திரும்பத் திரும்பக் கூறினர்.
ஆனால் அதற்காக நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்பதை உணர்கிறேன், நான் உண்மையாகவே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தொடர் அருமையான தொடர் இந்தச் சம்பவம் அருமையான டெஸ்ட் போட்டியை கெடுப்பதை நான் விரும்பவில்லை” என்றார்.
கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்களை நோக்கி வசை பொழிவது மிகவும் சீரியஸாகப் பார்க்கப்படும் ஒன்றாகும். அதனால் மன்னிப்பு கேட்டாலும் ஐசிசி பென் ஸ்டோக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பாப் பாடகரான ஷீரன், பென் ஸ்டோக்ஸின் பெரிய விசிறி என்பதும் கூறப்படுகிறது, தன் தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் என்ன மனநிலையில் இருந்தார் என்பதும் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT