Published : 21 Jan 2020 01:15 PM
Last Updated : 21 Jan 2020 01:15 PM

தோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்: பாக். முன்னாள் பவுலர் ஷோயப் அக்தர் கருத்து

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், இந்தியா தோனிக்கு மாற்று வீரரைக் கண்டுபிடித்து விட்டது என்று தன் யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

எந்த நாட்டு வீரர்களைப் புகழ்ந்து கூறுகிறாரோ இல்லையோ, தொடர்ந்து இந்திய வீரர்களைப் புகழ்ந்து, குறிப்பாக கோலியை புகழ்வதில் முன்னணி வகித்து வருகிறார் ஷோயப் அக்தர். அவர் எதிர்பார்ப்பை யாராவது நிறைவு செய்ய முயற்சி செய்தால் நல்லது என்கிற அளவுக்கு இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்து தள்ளி வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தோல்வியிலிருந்து மீண்டு வந்து 2-1 என்று இந்திய அணி கைப்பற்றியதை புகழ்ந்த அக்தர், “இந்தியா கடைசியாக தோனிக்கு மாற்று வீரரைக் கண்டு பிடித்து விட்டது. மணீஷ் பாண்டே அந்த இடத்துக்கு பொருத்தமானவராகத் தெரிகிறார், ஷ்ரேயஸ் அய்யரும் முழு நிறைவான வீரராக திகழ்கிறார், இதன் மூலம் இந்தியா பேட்டிங்கில் கடைசி வரை நன்றாகத் திகழ்கிறது.

இந்த வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெடில் நிறைய ஆடுகின்றனர், அழுத்தமான சூழ்நிலைகளை எப்படிக் கையாள்வது என்பதை தெரிந்து வைத்துள்லனர். பெரிய பெயர்கள் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால்தான் முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடுகின்றனர்” என்று கூறியுள்ளார். அக்தர்.

ஆனால் பாண்டே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் பெரிய பங்களிப்புச் செய்யவில்லை. கோலி, தவண், ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோர்களே பிரதானமாக ரன்களைக் குவித்தனர், அக்தர் ராகுலைக் கூறியிருந்தாலும் சரி. எங்கிருந்து மணீஷ் பாண்டே, தோனிக்கு மாற்றாக வந்தார் என்று அக்தர் கூறுகிறார் என்று புரியவில்லை.

ஆனால் மணீஷ் பாண்டே அபாரமாக பீல்டிங் செய்கிறார், அன்று பின்ச்சுக்கு எடுத்த ஒரு கை கேட்ச் அபாரமானது, ஆனால் பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை, எதை வைத்து தோனிக்கு மாற்று மணீஷ் பாண்டே என்று கூறுகிறார் என்று தெரியவில்லை, ராகுல் என்பதற்குப் பதிலாக பாண்டே என்று கூறிவிட்டாரா என்பதும் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x