Last Updated : 20 Jan, 2020 04:28 PM

 

Published : 20 Jan 2020 04:28 PM
Last Updated : 20 Jan 2020 04:28 PM

முதலில் ஷிகர் தவண், இப்போது இசாந்த் சர்மா: காயத்தால் நியூஸிலாந்து தொடரில் பங்கேற்பு சந்தேகமே?

நியூஸிலாந்து அணிக்கு எதிராக வரும் 24-ம் தேதி முழுமையான கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஷிகர் தவண், வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா காயம் காரணமாக பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் விதர்பா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இன்றைய ஆட்டத்தில் இசாந்த் சர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

அதேபோல இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் நேற்று ஃபீல்டிங் செய்யும் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு தொடக்கத்திலேயே வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுன்ஸரில் மார்பு விலா எலும்பில் காயம் வேறு தவணுக்கு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து ஷிகர் தவணுக்கு எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரின் இடது தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் ஷிகர் தவண் இடம் பெறமாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஷிகர் தவணுக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது. ஷிகர் தவண் அணியில் இல்லாமல் போனது ஒரு பின்னடைவாக இருக்கும் நிலையில், இன்று இசாந்த் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா : கோப்புப்படம்

டி20 தொடர், ஒருநாள் தொடருக்கு இசாந்த் சர்மா சேர்க்கப்படமாட்டார் என்றபோதிலும், டெஸ்ட் தொடருக்கு முக்கியத் துருப்புச் சீட்டு இசாந்த் சர்மா என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், நியூஸிலாந்தில் அதிவேக ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். அங்கு இசாந்த் சர்மா, பும்ரா, ஷமி, ஷைனி ஆகியோரின் பந்துவீச்சு நன்கு எடுபடும் என்ற நிலையில் இசாந்த் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் பின்னடைவாகும்.

நியூஸிலாந்து எதிரான டி20 தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று நியூஸிலாந்துக்குப் புறப்படுகிறது. இப்போது இசாந்த் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக பெங்களூரு என்சிஏ அகாடமிக்குச் சென்று சிகிச்சை எடுத்து, பயிற்சி எடுத்த பின்தான் நியூஸிலாந்து செல்ல முடியும்.

இதனால் நியூஸிலாந்து தொடரில் ஷிகர் தவண், இசாந்த் சர்மா ஆகியோர் இடம் பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x