Last Updated : 20 Jan, 2020 12:06 PM

 

Published : 20 Jan 2020 12:06 PM
Last Updated : 20 Jan 2020 12:06 PM

நாங்க எதிர்பார்த்த மாதிரி ஆடுகளம் இல்லை; இந்தியாவின் 'டெத் பவுலிங்' அருமை: ஆரோன் பிஞ்ச் பெருமை

பெங்களூரு ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை. முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்க வேண்டும். அதேசமயம், இந்திய அணியின் டெத் பவுலிங் சிறப்பாக இருந்தது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்தார்.

பெங்களூருவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 119 ரன்களும், துணையாக ஆடிய கேப்டன் கோலி 89 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். இருவரின் கூட்டணியும் 137 ரன்கள் சேர்த்தனர்.

இந்தத் தொடரில் தோல்வி அடைந்தது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்திய அணிக்கு விராட் கோலி கிடைத்தது மிகச் சிறப்பானது, எப்போதுமே உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக கோலி திகழ்கிறார். உலகின் முதல் 5 டாப் பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மாவும் என்னைப் பொறுத்தவரை இருக்கிறார். இருவரின் ஆட்டமும் நேற்று மிகச் சிறப்பாக இருந்தது. அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.

ஷிகர் தவண் இல்லாத நிலையில் கோலியும், ரோஹித் சர்மாவும் நிதானமாக பேட் செய்து பெரும்பாலான ரன்களை ஸ்கோர் செய்தது சிறப்பாகும். இருவரின் பேட்டிங்கும் உண்மையில் உயர்தரமானது.

கடந்த இரு போட்டிகளிலும் நாங்கள் பந்துவீச்சிலும், கடைசி 10 ஓவர்கள் பேட்டிங்கிலும் பல தவறுகளைச் செய்தோம். ராஜ்கோட் போட்டியில் கடைசி 10 ஓவர்களில் மோசமாகப் பந்து வீசியதால், ராகுல் பேட்டிங்கிற்கு இலக்கானோம். பெங்களூரு ஆட்டத்தில் கடைசி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்தோம்.

பெங்களூரு மைதானம் நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. ராஜ்கோட் மைதானம் போல் இருக்கும் என்று நினைத்தோம். டாஸ் வென்ற நாங்கள் பேட்டிங் செய்ததற்கு பதிலாகப் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்க வேண்டும். நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஆடுகளம் மந்தமாகவும், வறண்டும் காணப்பட்டது. ஆனால் இந்த ஆடுகளத்திலும் இந்திய வீரர்கள் எங்களை ரன் சேர்க்கவிடாமல் டெத் பவுலிங்கை வீசியது சிறப்பாகும்.

குறிப்பாக ஷமியின் யார்க்கர்கள், ஷைனி, பும்ராவின் வேகப்பந்துவீச்சு ஆகியவை நெருக்கடி தரும் விதத்தில் இருந்தன. இரு போட்டிகளிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். சுழற்பந்துவீச்சாளர்களும் அருமையாகச் செயல்பட்டார்கள். புதிய பந்தில் பந்துவீசும்போது மெதுவாகப் பந்து வந்தது''.

இவ்வாறு ஆரோன் பிஞ்ச் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x