Published : 19 Jan 2020 01:05 PM
Last Updated : 19 Jan 2020 01:05 PM

சிஎஸ்கே அணியில் தோனியின் நிலை என்ன? 2021 ஐபிஎல் போட்டியில் தொடர்வாரா? ஸ்ரீனிவாசன் பதில்

புதுடெல்லி,

இந்திய அணியின் மத்திய ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கேப்டன் தோனியின் நிலைமை ஐபிஎல் போட்டியில் என்னாகும் என்ற கவலை ரசிகர்களுக்கு எழுந்துள்ள நிலையில் அதற்கு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்விக்குப்பின் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவர் விரைவில் ஓய்வு அறிவிக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட தோனி, ஜனவரி வரை பொறுத்திருங்கள் என்று தெரிவித்திருந்தார்

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் தோனி இடம் பெறுவாரா என்ற கேள்வி அவரின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துவந்தது.ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து தோனியின் பெயரை நீக்கிவிட்டது. இதனால் இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், " தோனி 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் எவ்வாறு விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தோனிக்கான இடம் இந்திய அணியில் இருக்கிறது. ஆனால் அவரின் பேட்டிங் ஃபார் ஐபிஎல் இருப்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்

இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறிய அளவு ஏலம் மட்டுமே நடந்துள்ளது அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்ந்து வருகிறார். ஆனால், 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஒட்டுமொத்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு புதிதாக அணித் தேர்வு நடக்கும் அப்போது தோனியின் நிலை சிஎஸ்கே அணியில் என்னாகும் என்ற கேள்வி எழுந்தது.

தோனியுடன் என்ஸ்ரீனிவாசன்: கோப்புப்படம்

இது குறித்து டெல்லியில் இந்தியாசிமெண்ட்ஸ் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்திருந்த அதன் தலைவரும், சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான என்.ஸ்ரீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில், " தோனி தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்ற கேள்விகளைப் பலரும் கேட்கிறார்கள். பேசுகிறார்கள். நான் கூறுகிறேன். தோனி விளையாடுவார் என்று உறுதியாகக் கூறுகிறேன். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாடுவார், அடுத்த ஏலத்திலும் தோனி சிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்படுவார், தக்கவைக்கப்படுவார். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

38 வயதான தோனி இன்னும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகுந்த சுறுசுறுப்பாகவே இருக்கிறார். நீண்ட காலத்துக்குப்பின் ராஞ்சியில் தனது பேட்டிங், கீப்பிங் பயிற்சியில் தீவிரமாக தோனி ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x