Published : 18 Jan 2020 09:31 AM
Last Updated : 18 Jan 2020 09:31 AM

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர், ‘மெய்டன் ஸ்பெஷலிஸ்ட்’ பாபு நட்கர்னி காலமானார் 

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் பாபு நட்கர்னி காலமானார் அவருக்கு வயது 86. பொவாயில் உள்ள தனது மகள் அனுராதா கரேயின் இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். 1950களிலும் 60களிலும் நட்கர்னி 41 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். மகாராஷ்ட்ரா நாஷிக்கில் பிறந்த நட்கர்னி இடது கை சுழற்பந்து வீச்சில் மிகவும் சிக்கனமான வீச்சாளராக அறியப்படுபவர். தன் டெஸ்ட் வாழ்க்கையில் ஓவருக்கு சராசரியாக 1.67 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அதிசிக்கன பவுலர் நட்கர்னி.

1964ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 21 மெய்டன் ஓவர்களை தொடர்ச்சியாக வீசி இதுவரை யாரும் செய்யாத சாதனைக்குச் சொந்தக்காரர் பாபு நட்கர்னி. 32 ஓவர்கள் 27 மெய்டன் 5 ரன்கள், விக்கெட் இல்லை இது உலக அளவில் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாக இன்று வரை திகழ்கிறது.

அதே போல் 1960-61 பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஒரு இன்னிங்ஸில் கான்பூரில் 32 ஓவர் 24 மெய்டன் 23 ரன்கள் என்று அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து டெல்லியில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக 34 ஓவர் 24 மெய்டன் 24 ரன்கள் ஒரு விக்கெட்.

வலைப்பயிற்சியில் குட் லெந்த் பகுதியில் காசு ஒன்றை வைத்து அந்த இடத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வீசிக்கொண்டிருப்பாராம் பாபு நட்கர்னி. பேட்டிங்கில் 1,414 ரன்களை எடுத்த நட்கர்னி இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் எடுத்தார், 7 அரைசதங்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 விக்கெட்டுகளை எடுத்த மெய்டன் புகழ் நட்கர்னி 191 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 40 ரன்கள். 14 சதங்களை எடுத்துள்ளார்.

1967-68-ல் நியூசிலாந்து தொடரில் இவர் வெலிங்டனில் எடுத்த 6/43 பவுலிங்கினால் இந்திய அணி ஒரு அரிய வெற்றியை அயல் மண்ணில் ஈட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x