Published : 16 Jan 2020 03:47 PM
Last Updated : 16 Jan 2020 03:47 PM

பேட்டிங் வரிசையில் கவனம்: 3ம் நிலைக்குத் திரும்புகிறார் விராட் கோலி- வெள்ளியன்று ராஜ்கோட்டில் 2வது போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணி நாளை (வெள்ளி, 17-1-20) 2வது ஒருநாள் ராஜ்கோட்டில் வாழ்வா சாவா போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் நோ-லாஸில் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு அதிர்ச்சி மருத்துவம் அளித்தது, ஒரு செட்டில்டு அணியாக இல்லாமல் வீரர்களை மாற்றி மாற்றி யாரையுமே செட்டில் ஆக விடமால் செய்யும் அணுகுமுறையினால் ரோஹித் சர்மா, விராட் கோலி தவிர அணியில் யாரும் சீரான முறையில் ஆடுவதில்லை, பவுலிங்கிலும் இப்படித்தான் இந்தியப் பிட்ச்களி உமேஷ் யாதவ்தான் சிறந்த வீச்சாளர் ஆனால் அவருக்கு வாய்ப்பில்லை, அதேபோல் ஆஸ்திரேலியா எப்போதுமே அனுபவம் வாய்ந்த இந்திய ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக திணறியதையே நாம் பார்த்திருக்கிறோம்.

எனவே விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் ஒருவருக்கொருவர் ஜால்ரா போட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தி அஸ்வினை உள்ளே கொண்டு வருவதைப் பரிசீலிக்க வேண்டும். அவரது பல தினுசுகளில் வரும் பந்துகள் நிச்சயம் ஆஸி.க்கு சிக்கல்களைத் தோற்றுவிக்கும். தோனி அஸ்வினைப் பயன்படுத்தியதை போல் கோலி பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

மேலும் அன்று ஷிகர் தவண் அதிகபட்சமாக 74 ரன்களை அடித்ததனால் அவரை அணியிலிருந்து நீக்கக் கூடாது என்ற முடிவையும் எடுக்கக் கூடாது, காரணம் அவர் அன்று 51 பந்துகளை ரன் எடுக்க முடியாமல் டாட் பால்களாக்கினார். கோலியே கூறியது போல் ஆட்டத்தை கழுத்தைப்பிடித்து நம் பக்கம் இழுத்து வரவில்லை, ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து மாற்றிக் கொண்டு செல்ல வேண்டிய தீவிரம் இந்திய பேட்ஸ்மென்களிடம் இல்லை, ஷிகர் தவண் சுயநலமாக ஆடுவது நிச்சயம் வெளிப்படையாகத் தெரிகிறது. நிச்சயம் பார்மில் இருக்கும் மயங்க் அகர்வால், இப்போதைக்கு ஷிகர் தவணை விட சிறந்த தேர்வாக இருக்கும். ஷிகர் தவண் முன்னேற்றம் கண்டாலே தவிர அவரை அணியில் எடுக்கக் கூடாது.

தவணை உட்கார வைத்து விட்டு, ரோஹித், ராகுல் ஓப்பனிங், 3ம் நிலையில் விராட் கோலி, அணியில் ஒன்று மனீஷ் பாண்டே வர வேண்டும் இல்லையே கேதார் ஜாதவை ஒரு ஆல்ரவுண்டர் (!) தெரிவாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் ராஜ்கோட், பெங்களூர் மைதானங்கள் சிறியது, பிளாட் பிட்ச் என்பதால் கேதார் ஜாதவ் ஒரு மாற்று ஸ்பின்னராக ஒரு சில ஓவர்களை வீசச் செய்யலாம், பேட்டிங்கில் இவர் கடைசியில் பெரிய அதிரடியெல்லாம் காட்டாவிட்டாலும் டாப் ஆர்டர் நன்றாக ஆடிய பிறகு பெரிய அளவில் ரன் விகிதம் இறங்காமல் பார்த்துக் கொள்வார் என்று நம்பலாம்.

ரிஷப் பந்த் அணியில் இல்லாதது ஒரு மறைமுக ஆசீர்வாதமே இதனால் சைனியைக் கூட அணியில் தேர்வு செய்ய முடியும். அன்று இந்திய வீச்சாளர்கள் பும்ரா, ஷமி இருவரும் அதிக ஓவர் பிட்ச்களை வீசினர், இதனை வார்னர் கூறும்போது “ஓவர்பிட்ச் பந்துகளை நன்றாகப் பயன்படுத்தி நல்ல தொடக்கம் கொடுத்தோம்” என்றார். ஒன்று ஓவர் பிட்ச் இல்லையேல் ஷார்ட் பிட்ச். ஷமி கூட சரியான் லெந்தில் வீசவில்லை.

அதே போல் குல்தீப் யாதவ், இவர் சுழற்சி முறையில் சாஹலுடன் மாற்றி மாற்றி தேர்வு செய்யப்படுவதால் நம்பிக்கை இழந்தார், இதனால் பந்தை மிகவும் மெதுவாக அடிக்குப் பயந்து வீசுகிறார், இதனால் அவரது விக்கெட் வீழ்த்தும் திறமை மழுங்கியதோடு, மெதுவாக வருவதால் பேட்ஸ்மென்கள் எளிதில் இவரை கணித்து வெளுக்கின்றனர். யாதவ் போன்ற பவுலர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால்தான் வெற்றி பெற முடியும். அவர் பம்முகிறார். எனவே ராகுல் சாஹர், அல்லது மயங்க் மார்க்கண்டே, அல்லடு ஷ்ரேயஸ் கோபால் ஆகியோரை முயற்சி செய்யலாம். குல்தீப் மெதுவாக வீசுவதால் அவரது மாறுபட்ட பந்துகளையு எதிரணி வீரர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுகின்றனர், ரவி சாஸ்திரி என்ன செய்கிறார்?

முதலில் இந்தியாவில் ஆடும்போது அஸ்வினை குறைந்தது 50 ஓவர் கிரிக்கெட்டில் கொண்டு வருவது அவசியம். அதே போல் ஆல்ரவுண்டர் இடத்துக்கு ஷிவம் துபேவா, கேதார் ஜாதவ்வா என்ற கேள்வியும் சுவாரஸ்யமானதுதான்.

ஆடம் ஸாம்ப்பாவிடம் 4வது முறையாக கோலி ஆட்டமிழந்ததையடுத்து இந்தப் போட்டியில் அவர் அந்தத் தவறைச் செய்யாமல் இருப்பதில் அதீத கவனம் செலுத்தி மற்ற பவுலரிடம் மலிவாக ஆட்டமிழந்து விடக்கூடாது. பவுலிங்கில் ஷர்துல் தாக்கூர் அன்று 5 ஓவர் 43 ரன்கள் என்று விளாசப்பட்டார் அதனால் அவர் நாளை இருப்பாரா என்பது தெரியவில்லை.

ஜடேஜா அணியில் இருப்பார், ஆனால் சாஹலா, குல்தீப்பா என்பதில் குழப்பம் உள்ளது. இந்திய அணிக்கு உள்ள ஒரே சாதகம் கடந்த போட்டியில் ஆஸி மிடில் ஆர்டர் இறங்கவில்லை என்பதால் நாளை விரைவில் வார்னர், பிஞ்ச் ஜோடி வெளியேறினால் ஸ்மித், லபுஷான், கேரி உள்ளிட்ட மிடில் ஆர்டர் வரிசை நிச்சயம் ராஜ்கோட் பிட்சில் திணற வாய்ப்புள்ளது.

பொதுவாக பவுலிங் வீக்காக இருக்கும் போது இந்திய அணி நிர்வாகம் பிட்சை மந்தமாகப் போட்டு எதிரணியினரை டைட் செய்து 270 -80 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு மந்தப் பிட்சில் எதிரணியினரின் எடுபடாத பந்து வீச்சை எதிர்கொண்டு எளிதில் இலக்கை எட்டிவிடும், இல்லையேனில் கிரீன் டாப் பிட்சைப் போட்டால் இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும், இந்த இரண்டுமில்லாமல் பிட்சை 350 பிட்சாகப் போட்டால் இந்திய அணியில் பிக் ஹிட்டர்கள் இல்லாததால் நிச்சயம் ஆஸி.யிடம் தோல்வியையே சந்திக்கும்.

நாளை (வெள்ளி) ஆட்டம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x