Published : 02 Jan 2020 10:01 AM
Last Updated : 02 Jan 2020 10:01 AM

24 நாடுகள் கலந்து கொள்ளும் ஏடிபி கோப்பை ஆஸி.யில் நாளை தொடக்கம்: ரபேல் நடால், ஜோகோவிச் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்பு

உலகின் தலை சிறந்த வீரர்களை உள்ளடக்கிய 24 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளும் ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடர் இந்த ஆண்டு முதல் நடத்தப்பட உள்ளது. முதல் சீசன் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் நாளை (3-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் 6 நாட்கள் லீக் போட்டிகள் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்று தொடங்குகிறது.

இந்த வகையில் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதி ஆட்டங்களும், 11-ம் தேதி அரை இறுதியும், 12-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி சிட்னியில் உள்ள கென் ரோஸ்வால் அரினாவில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

‘ஏ’ பிரிவில் செர்பியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, சிலிஅணிகளும், ‘பி’ பிரிவில் ஸ்பெயின்,ஜப்பான், ஜார்ஜியா, உருகுவே அணிகளும், ‘சி’ பிரிவில் பல்கேரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, மால்டோவா அணிகளும், ‘டி’ பிரிவில் ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா, நார்வே அணிகளும், ‘இ’ பிரிவில் ஆஸ்திரியா, குரோஷியா, அர்ஜென்டினா, போலந்து அணிகளும், ‘எப்’ பிரிவில் ஜெர்மனி, கிரீஸ், கனடா, ஆஸ்திரேலியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்றானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

இந்த வகையில் 6 அணிகள் கால் இறுதியில் நுழையும். மீதம் உள்ள இரு இடத்துக்கு அனைத்து பிரிவிலும் 2-வது இடம் பிடித்த 6 அணிகளில் இருந்து சிறப்பான 2 அணிகள் தேர்வு செய்யப்படும். இந்தத் தொடரில் ரோஜர் பெடரர் சொந்த காரணங்களுக்காக கலந்து கொள்ள மறுத்ததால் கடைசி நேரத்தில் சுவிட்சர்லாந்து அணி விலகிக் கொண்டது.

அதேவேளையில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், இத்தாலியின் பேபியோ போக்னி, கிரீஸின் ஸ்டேபானோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரெவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலர் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாளான நாளை பெல்ஜியம் - மால்டோவா, இங்கிலாந்து - பல்கேரியா, அமெரிக்கா - நார்வே, ரஷ்யா - இத்தாலி, கிரீஸ் - கனடா, ஜெர்மனி - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளின் மோதலில் ஒற்றையர் பிரிவில் 2 ஆட்டங்கள், இரட்டையர் பிரிவில் ஒரு ஆட்டம் நடத்தப்படும். அதிகபட்சமாக இரு மோதல்களில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி சுற்றில் எளிதாக கால் பதிக்கும்.

ரபேல் நடாலை உள்ளடக்கிய ஸ்பெயின் தனது முதல் ஆட்டத்தில் 4-ம் தேதி ஜார்ஜியாவை எதிர்கொள்கிறது. இதே நாளில் ஜோகோவிச்சை உள்ளடக்கிய செர்பியா, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்தத் தொடரின் பரிசுத் தொகை ரூ.1.50 கோடி ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x