Published : 29 Dec 2019 01:18 PM
Last Updated : 29 Dec 2019 01:18 PM

கங்குலி அளித்த உணவை சாப்பிட்டிருக்கிறேன்; பாகிஸ்தானியர்களுக்கு பெரிய மனது; கிரிக்கெட்டில் மதமும் கலக்கவில்லை: கனேரியா குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதில்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் : கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

சவுரவ் கங்குலியின் ரெஸ்டாரன்ட்டை திறந்து வைத்து அவர் வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிட்டு இருக்கிறேன், பாகிஸ்தானியர்களுக்குச் சிறிய இதயமும் இல்லை,கிரிக்கெட்டில் மதமும் கலக்கவில்லை என்று டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதில் அளித்துள்ளார்

பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா இந்து மதத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் அணியில் அவர் 2000 முதல் 2010ம் ஆண்டு வரை விளையாடியபோது பல்வேறு மதரீதியான பாகுபாடு காட்டப்பட்டார் என்றும் அவர் அளித்த உணவுகளைக்கூடப் பல நேரங்களில் வீரர்கள் உண்ண மறுத்தார்கள் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.

ஷோயப் அக்தரின் பேசியது அனைத்தும் உண்மை, தன்னை பல வீரர்கள் பாகுபாடு காட்டி நடத்தியுள்ளார்கள், சில வீரர்கள் ஆதரவும் காட்டியுள்ளார்கள் என்று டேனிஷ் கனேரியா பேட்டி அளித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கனேரியாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் பாகிஸ்தானில் உள்ள ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

கிரிக்கெட்டில் ஒருபோதும் மதம் கலக்கவில்லை. என்னுடைய தலைமையின் கீழ் டேனிஷ் கனேரியா பல போட்டிகளில் விளையாடியுள்ளார் ஒருமுறைகூட அவ்வாறு நடத்தியதில்லை. சக்லைன் முஷ்டாக்கை அணியில் சேர்ப்பதைக் காட்டிலும், கனேரியாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அணித் தேர்வாளர்களும் நானும் கூறியிருக்கிறோம். பாகிஸ்தானின் எதிர்கால பந்துவீச்சாளராக கனேரியா இருக்கப்போகிறார் என்று வாய்ப்புக்கள் அளித்தோம்.

ஆனால் டேனிஷ் கனேரியா அணியில் விளையாடியபோது பல வீரர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றும், அவர் இந்து என்பதால் அவர் அளித்த உணவுகளை சாப்பிடவில்லை என்று குற்றச்சாட்டு வந்ததேக் கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்து அதுபோன்று அணியில் யாரும் நடந்தது இல்லை.

ஒரு வீரர் முஸ்லிம் இல்லை என்பதற்காக அவரை பாகுபாடு காட்டி நடத்தவும் இல்லை அதுபோன்று ஒரு சம்பவமும் நடந்ததும் இல்லை. எங்கள் அணியில் யூசுப் விளையாடியபோது அவர் முஸ்லிம் இல்லை. ஆனால் சிறிது காலத்துக்குப்பின் அல்லாஹ்வி்ன் ஆசியால் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறி முகமது யூசுப் என்று பெயர் வைத்துக்கொண்டார்

முகமது யூசுப் ஒருபோதும் தான் யுகானா என்ற பெயரில் இருந்தபோதும் இஸ்லாமியராக மாறியபோதும் அவரிடம் நாங்கள் பாகுபாடு காட்டியதில்லை.அவ்வாறு ஏதேனும் இருந்திருந்தால், நிச்சயம் அவர் மதம் மாறியிருக்கமாட்டார்

பாகிஸ்தான் மக்களுக்குப் பெரிய மனது இருக்கிறது, ஒவ்வொருவரையும் திறந்த மனதுடன் ஏற்பார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு சிறிய இதயம், அதனால்தான் இவ்வாறு நடக்கிறார்கள் என்று சிலர் கூறுவதை நான் ஏற்க மாட்டேன்.

கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணி 15 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தான் மக்கள் இன்முகத்துடன், அன்புடன் வரவேற்றார்கள். எங்கு வேண்டுமானாலும் சென்று இந்திய வீரர்கள் சாப்பிட்டார்கள், ஷாப்பிங் செய்தார்கள், டாக்ஸியில் சென்றார்கள் ஆனால் எந்த மக்களும் இந்திய வீரர்களிடம் இருந்து பணம் வாங்கவில்லை.

அடுத்த ஒரு ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்குச் சென்றோம். அப்போது நான்தான் அணிக்கு கேப்டனாக இருந்தேன். பாகிஸ்தான் மக்கள் எப்படி வரவேற்றார்களோ அதேபோன்ற அன்புடன், பாசத்துடன் இந்திய மக்களும், ரசிகர்களும் நடந்து கொண்டார்கள்.

அவர்களின் வீட்டுக் கதவை திறந்துவைத்து எங்களுக்கு வரவேற்பு அளித்தார்கள், விருந்தினராக தங்கி்ச்செல்ல வேண்டும் என்று அன்புடன் அழைத்தார்கள். நாங்கள் சாப்பிட்ட உணவுக்கு எங்களிடம் பணம் பெறவும் மறுத்துவிட்டனர்.

இரு நாட்டு மக்களுக்கும் இடையே அன்பு நிறைந்துள்ளது. ஆதலால், கனேரியா சொல்வது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. கனேரியா இருந்தபோது நான் கேப்டனாக இருந்த காலத்தில் அவர் மீது பாகுபாடு காட்டி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.

கடந்த 2005-ம் ஆண்டு இந்தியப் பயணித்தின் போது, கொல்கத்தாவில் கங்குலியின் ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றோம். நானும், சச்சினும்தான் இந்த ரெஸ்டாரன்டை திறந்து வைத்தோம். எனக்காக சவுரவ் கங்குலி சமைத்த உணவுகளை அனுப்பிவைத்தார், அதை நான் சாப்பிட்டேன்.கங்குலி அனுப்பிய உணவுகளை நாங்கள் சாப்பிட்டபோது, கனேரியா அளித்த உணவுகளை எவ்வாறு மறுத்திருப்போம்.

ஷார்ஜாவில் போட்டி நடந்தபோது, இந்திய வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும் ஒரே ஹோட்டலில்தான் தங்கி இருந்தோம். இரு அணி வீரர்களும் சேர்ந்து அமர்ந்து பலமுறை பேசி இருக்கிறோம், நகைச்சுவைகளைப் பகிர்ந்திருக்கிறோம், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளோம். ஆனால், பாகுபாட்டுடன் நடந்தது இல்லை

ஒருமுறை என்னையும், எங்கள் அணியையும் அதிபர் முஷ்ரப் விருந்துக்கு அழைத்திருந்தார். அப்போது முஷ்ரப் என்னிடம், " வீரர்களில் யார் நமாஸ் செய்கிறார்களோ தாடி வைத்திருக்கிறார்களோ அவர்களைத்தான் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்" என்று தெரிவித்தார்.

இதைக்கேட்டு நான் சிரித்தேன். முஷ்ரப் என் மீது அன்பாகவும், என் நலனில் கவனமாக இருந்தவர். ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். நான் கூறினேன், கிரிக்கெட் அதற்குரிய இடத்தில் இருக்கிறது, மதம் அதற்குரிய இடத்தில் இருக்கிறது. இரு விஷயங்களையும் கலக்கக்கூடாது. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவேளை நான் அவ்வாறு நடந்திருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், நீதியின் முன் வரும் போது நீங்கள் இந்து முஸ்லிம் பாராமல் தீர்ப்பு கூறுங்கள் என்று தெரிவித்தேன்

இவ்வாறு இன்சமாம் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x