Last Updated : 27 Dec, 2019 03:58 PM

 

Published : 27 Dec 2019 03:58 PM
Last Updated : 27 Dec 2019 03:58 PM

பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது: கவுதம் கம்பீர் தாக்கு

பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் : கோப்புப்படம்

புதுடெல்லி,

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா விவகாரத்தில் அந்நாட்டின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தனியார் சேனல் ஒன்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பேட்டி அளித்த போது கூறுகையில், " பாகிஸ்தான் அணியில் கனேரியா இடம் பெறுவதைப் பல வீரர்கள் விரும்பவில்லை.

ஏனென்றால் கனேரியா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை யாருக்கும் பிடிக்கவில்லை, அவரின் பல்வேறு சாதனைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தது இல்லை. பல நேரங்களில் அவரின் திறமையை சக வீரர்களைக் கிண்டல் செய்துள்ளனர். பல நேரங்களில் கனேரியா அளித்த உணவைக்கூட சக வீரர்கள் சாப்பிட மறுத்திருக்கிறார்கள்." என வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ஷோயப் அக்தரின் கருத்தை கனேரியாவும் மறுக்கவில்லை, அக்தர் உண்மையைப் பேசியுள்ளார், தகுந்த நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த வீரர்களின் பெயரை வெளியிடுவேன் என்று கனேரியா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அணியில் முகமது அசாருதீன் போன்ற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வீரர்கள் கூட கேப்டனாக நீண்ட காலம் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்து என்பதால் டேனிஷ் கனேரியா மீது பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. ஒரு கிரிக்கெட் வீரர் பிரதமராக இருக்கும் நாட்டில் இதுபோன்று நடக்கிறது. இது உண்மையில் வெட்கக்கேடு.

இந்திய அணியின் முகமது கைஃப், இர்பான் பதான், முனாப் படேல் ஆகிய வீரர்கள் மீது தேசம் அதிகமான மதிப்பு வைத்திருக்கிறது. இதில் முனாப் படேல் என்னுடைய நெருங்கிய நண்பர். நாங்கள் அணியாக ஒற்றுமையாக விளையாடியபோது, தேசத்தை பெருமைப்படுத்தி இருக்கிறோம். ஆனால், கிரிக்கெட் வீரர்கள் குறித்து பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் துரதிர்ஷ்டம்.

ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரருக்கே இந்த நிலை என்றால், நினைத்துப் பாருங்கள் இந்துக்கள், சீக்கியர்களுக்கு மற்றும் அங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்.

என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இந்த இருவிஷயங்களும் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, இந்தியர்களுக்கு எதிரானதும் அல்ல.

நான் மக்களிடம் கேட்பதெல்லாம், என்ன போராட்டம் செய்தாலும் அமைதியான முறையில் நடத்துங்கள். உங்கள் பிரச்சினைகளை நிச்சயம் மத்திய அரசு களையும். வன்முறையாலோ, கல்வீசுவதாலோ, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துவதாலோ எதற்கும் தீர்வு காண முடியாது.
இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x