Published : 24 Dec 2019 01:57 PM
Last Updated : 24 Dec 2019 01:57 PM
இலங்கைக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 316 ரன்கள் இலக்கை விரட்டிய விரட்டல் மன்னன் விராட் கோலி 107 ரன்களை எடுத்தது 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே தினத்தில்தான் என்பதை அவரது தீவிர ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
இந்தப் போட்டிக்கு சேவாக் கேப்டன் என்பது இன்னொரு சுவாரஸ்யம்.
ஆம்! டிசம்பர் 24, 2009 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலி தன் முதல் ஒருநாள் சர்வதேச சதத்தை எடுக்க இவரது சீனியர் பார்ட்னர் கவுதம் கம்பீர் 137 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 150 ரன்களை விளாசினார்.
விராட் கோலி 114 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 107 ரன்களை எடுத்தார். இலங்கை அணி முதலில் பேட் செய்தது, உபுல் தாரங்கா 128 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உடன் 118 ரன்களைக் குவித்தார். இலங்கை கேப்டன் குமார் சங்கக்காரா 72 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார், இலங்கை அணி 315 ரன்களுக்கு 6 விக்கெட் என்று முடிந்தது.
இலக்கை விரட்ட இந்திய அணி களமிறங்கிய போது இலங்கையின் சுரங்க லக்மல் பந்து வீச்சில் சேவாக், சச்சின் இருவரும் சடுதியில் ஆட்டமிழந்து செல்ல இந்திய அணி 23/2 என்று தடுமாறியது.
கிரேட் பினிஷர்களான யுவராஜ், தோனி அணியில் இல்லை. அப்போதுதான் இன்றைய இளைஞர்கள் வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்துவதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக விராட் கோலி, அனுபவசாலி கம்பீருடன் இணைந்தார்.
டெல்லி ஜோடியான கம்பீர், கோலி இணைந்து 224 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மலிங்கா 9.1 ஒவர் 75 ரன்கள் விக்கெட் இல்லை. விராட் கோலி இவரை புரட்டி எடுத்தது வேறு கதை.
அன்று சதத்தை ஆரம்பித்த விராட் கோலி இன்று 43 சதங்களுடன் 2019-ல் அதிக ரன்களை எடுத்த 2வது வீரர் பட்டியலில் உள்ளார். இத்தகைய பிரமாத இன்னிங்சை ஆடிய கம்பீர் இன்று ஓய்வு பெற்று அரசியலில் கலக்கி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT