Published : 23 Dec 2019 01:00 PM
Last Updated : 23 Dec 2019 01:00 PM

2019-ம் ஆண்டின் 'ரன் கிங்' ரோஹித் சர்மா: கோலியைப் பின்னுக்குத் தள்ளினார்; தொடர்ந்து 7-வது ஆண்டாக ரோஹித் சாதனை

ரோஹித் சர்மா : கோப்புப்படம்

கட்டாக்

2019-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக ரன் சேர்த்த வீரர் என்ற வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை முந்தினார் 'ஹிட் மேன்' ரோஹித் சர்மா.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை நோக்கி இந்திய அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மாவும், இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டனர்.

2019-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவிக்கும் வீரர்களில் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே கடும் போட்டி இருந்துவந்தது. ஆனால், ஆண்டு இறுதியில் கோலியை, ரோஹித் சர்மா முந்தியுள்ளார்.

இந்த ஆண்டில் மொத்தம் 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 1,490 ரன்கள் குவித்துள்ளார், விராட்கோலி, 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். 3-வது இடத்தில் மே.இ.தீவுகள் வீரர் ஷாய் ஹோப் 28 போட்டிகளில் 1,345 ரன்கள் சேர்த்துள்ளார்.

மேலும், கடந்த 22 ஆண்டுகளாக இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா வைத்திருந்த சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ஜெயசூர்யா கடந்த 1997-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகள் முழுவதிலும் 2 ஆயிரத்து 387 ரன்கள் சேர்த்திருந்தார்.

தற்போது 2019-ம் ஆண்டில் ரோஹித் சர்மா 2 ஆயிரத்து 379 ரன்களுடன் இருந்தார். ஒரு ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற அடிப்படையில் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 9 ரன்கள் சேர்த்தபோது, ஜெயசூர்யா சாதனையையும் முறியடித்தார்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன்களைத் தொடர்ந்து 7-வது ஆண்டாக ரோஹித் சர்மா தக்கவைத்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்திய வீரர்களில் அதிகபட்ச ரன்களை ரோஹித் சர்மா மட்டுமே அடித்துள்ளார். விராட் கோலி கூட ரோஹித் சாதனையை முறியடிக்கவில்லை.

2013-ம் ஆண்டில் (209), 2014 (264), 2015 (150),2017 (208), 2018 (162), 2019 (159) ஆகிய ரன்களைச் சேர்த்து ரோஹித் சர்மா அதிகபட்ச ரன்களை வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x