Last Updated : 23 Dec, 2019 06:40 AM

 

Published : 23 Dec 2019 06:40 AM
Last Updated : 23 Dec 2019 06:40 AM

தொடர்ந்து 10-வது முறை; ‘சேஸிங் நாயகன்’ கோலி, ஜடேஜா அபாரம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்: படம் உதவி ட்விட்டர்

கட்டாக்

ரோஹித் சர்மா, ராகுல், கோலியின் அபார அரைசதம், ஜடேஜா, சர்துல் தாக்கூரின் கடைசிநேர அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் கட்டாக்கில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம்கண்டன இந்திய அணி 8 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா(63) ராகுல்(73), கோலி(85), ஜடேஜா(39*), சர்துல் தாக்கூர்(17*) ஆகியோரின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தது.

ஆட்டநாயகனாக விரட்டல் மன்னன் விராட் கோலியும், தொடர்நாயகனாக ரோஹித் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர்.


தொடரை வெல்ல நடத்தப்படும் இருதரப்பு ஒருநாள் தொடரில் இறுதிஆட்டத்தில் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பின் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

கடந்த 2002-ம் ஆண்டு லாட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரில் 326 ரன்களை கங்குலி தலைமையில் இந்திய அணி சேஸிங் செய்ததே அதிகபட்சமாகும். அதன்பின் நேற்றைய சேஸிங் 2-வது அதிகபட்சமாகும்.

இதன் மூலம் கடந்த 2006-ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவில் நடந்த மே.இ.தீவுகள் அணி்க்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை இழந்ததில்லை எனும் 13 ஆண்டுகால வரலாற்றை இந்திய அணி தக்கவைத்தது. அதுமட்டுமல்லாமல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்்ச்சியாக கைப்பற்றும் 10-வது ஒருநாள் தொடராகும்.

'சேஸிங்' நாயகன்

300 ரன்களுக்கு மேல் இந்திய அணி சேஸிங் செய்யும்போதெல்லாம் ‘சேஸிங் நாயகன்’ விராட் கோலியின் ஆட்டம் ஜொலிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 10 முறை 300-க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை சேஸிங் செய்துள்ளது. இதில் கோலியின் பங்களிப்பு 7 சதங்கள், ஒரு சதம் உள்ளிட்ட 993 ரன்களாகும். ஒட்டுமொத்தத்தி்ல் “மாஸ்டர்ஆஃப் சேஸிங் கிங்” என்று கோலி அழைக்கப்படுகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணி சேஸிங்கின் போது, 80 முதல் 90 ரன்களுக்குள் விராட் கோலி(85) ஆட்டமிழந்தது நேற்றுதான் முதல்முறையாகும். அதுமட்டுமல்லாமல் சேஸிங்கின்போது 45-வது ஓவர்களின்போது கோலி ஆட்டமிழப்பது இது 4-வது முறை.

தவண் எதற்கு

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா,ராகுல் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்திரமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். ஷிகர் தவணுக்கு அடுத்தார்போல் நல்ல தொடக்கவீரராக ராகுல் கிடைத்துள்ளார், அதுமட்டுமல்லாமல் சிறந்த விக்கெட் கீப்பரும்கூட ஆனால், ஏன் இந்திய அணி நிர்வாகம் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தாமல் ரிஷப்பந்த்தை வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ரோஹித் சாதனை

ரோஹித் சர்மா தனது மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்ைக வெளிப்படுத்தி, ஒரு காலண்டர் ஆண்டில் தொடக்க வீரர்களில் அதிகமான ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். சேவாக், ஜெயசூர்யா, மேத்யூ ஹேடன் ஆகியோரை ரோஹித் முறியடித்தார்.

ஜாதவ் எதற்கு

இந்த ஒருநாள் தொடர் தொடங்கியதில் இருந்து எழுப்பப்பட்ட கேள்வி கேதார் ஜாதவ் தேர்வுதான். கூடுதல்பந்துவீ்ச்சாளராக ஜாதவை தேர்வு செய்துள்ளோம் என விளக்கம் தெரிவிக்கும் அணி நிர்வாகம், அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. பந்துவீச வாய்ப்பு இல்லாதபோது கூடுதல் பேட்ஸ்மேனாக மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வாலை களமிறக்கி இறக்கி இருக்கலாம்.

கேதார் ஜாதவ் பின்புலத்தில் இருந்து ஏதேனும் அழுத்தம் இருப்பதால்தான் தொடர்ந்து அணியில் நீடித்துவருகிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஜாதவ் போன்ற ‘வேஸ்ட் லக்கேஜ்’ஜால், திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பந்துவீச்சு, பீல்டிங் கவனம்

பந்துவீச்சில் இந்திய அணி தொடக்கத்தில் நன்றாக வீசியபோதிலும் கடைசி 10 ஓவரில் சொதப்பிவிட்டனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் பொலார்ட், பூரன் இருவரும் 118 ரன்கள் சேர்த்தனர். பும்ரா இல்லாததன் வெற்றிடம் தெரிகிறது. பீல்டிங்கிலும், கேட்சுகளை பிடிப்பதிலும் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 2 ரன்அவுட்கள், 3 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர்.

நல்ல தொடக்கம்

316 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித், ராகுல் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ரோஹித் சர்மா 9 ரன்களை எட்டியபோது, காலண்டர் ஆண்டில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் சேர்த்திருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

ரன்ரேட்டை குறையவிடாமல் பேட் செய்த ராகுல் 49 பந்துகளிலும், ரோஹித் 52 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். முதல்விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தநிலையில் ரோஹித் சர்மா 63 ரன்களில்(ஒருசிக்ஸர்,8பவுண்டரி) ஹோல்டர் பந்துவீச்சில் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்துவந்த கேப்டன் கோலி, ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

ஃபார்முக்கு திரும்பிய கோலி

கடந்த 2 போட்டிகளாக ஃபார்மில் இல்லாத கோலி, இதில் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பினார். தனது வழக்கமான ‘கவர் ட்ரைவ்’, ‘பவர் ஸ்ட்ரோக்’ ஷாட்களை ஆடி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ராகுல் 77 ரன்கள் சேர்த்த நிலையில்(ஒருசிக்ஸர்,8பவுண்டரி) ஜோஸப்பந்துவீச்சில் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்தார்.

அதன்பின் நடுவரிசை வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர்(7), ரிஷப்பந்த்(7) இருவரும் கீமோ பால்பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்கள். காட்ரெல் வீசிய யார்கர் பந்துவீச்சில் வேஸ்ட் லக்கேஜ் கேதார் ஜாதவ்(9) போல்டாகி வெளியேறினார்
5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை இந்திய அணி சேர்த்திருந்தது. கோலியும், ஜடேஜாவும் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு மெல்ல நகர்த்தினர். விராட் கோலி 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். 67 பந்துகளில் 88 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது.

சர்துல் அதிரடி

கோலிக்கு ஒத்துழைத்து ஜடேஜா ஆட அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. கோலியை ஆட்டமிழக்கச் செய்தால் ஆட்டம் திசைதிரும்பும் என எண்ணி பொலார்ட் பல பந்துவீச்சாளர்களை மாற்றினர். கீமோபால் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் மூலம் கோலி 89 ரன்களில் போல்டாகினார்.இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் ேசர்த்துப் பிரிந்தனர்

அடுத்து வந்த சர்துல் தாக்கூர், ஜடேஜாவுடன் சேர்ந்தார். வந்தவேகத்தில் பவுண்டரி அடித்தார் சர்துல்தாக்கூர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டநிலையில் காட்ரெல் பந்துவீ்ச்சில் சிக்ஸர்,பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்து ரசிகர்களின் பதற்றத்தை சர்துல் குறைத்தார்

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கீமோ பால் வீசிய 49-வது ஓவரில் ஜடேஜா ஒரு பவுண்டரியும், அடுத்த பந்தில் 2 ரன்களும் ஓடினார். 5-வது பந்தில் சர்துல் தாக்கூர் ஒருரன் அடிக்க ரன்அவுட் செய்யப்பட்டு அப்பீலுக்கு ஆளாகினார். 315 ரன்களில் இந்திய அணி இருந்தபோது வெற்றிக்கு ஒரு ரன்தேவைப்பட்டபோது கீமோபால் வீசியது நோ-பால் என நடுவர் வழங்க இந்திய அணி வென்றது.

48.4 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஜடேஜா 39 ரன்களிலும், சர்துல் தாக்கூர் 17 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
முன்னதாக முதலில் மே.இ.தீவுகள் அணி பேட்டிங் செய்தது.

மே.இ.தீவுகள்

மே.இ.தீவுகள் அணியில் லூயிஸ் 21 ரன்களிலும்,ஹோப், 42 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
3-வது விக்கெட்டுக்கு வந்த ஹெட்மெயர், 37 ரன்களிலும், சேஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். பூரனுடன், பொலார்ட் இணைந்தார். இருவரும் தொடக்கத்தில் அடித்து ஆடாமல் ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். 40 ஓவர்களுக்கு மேல் இருவரும் தங்கள் ரன் மெஷின் வேகத்தை அதிகரித்தனர்.

பொலார்ட், நிகோலஸ் பூரன் இருவரும் கடைசி 10 ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 118 ரன்களும், கடைசி 5 ஓவர்களில் 79 ரன்களும் சேர்க்கப்பட்டன.அதிரடியாக ஆடிய பொலார்ட் 51 பந்துகளில் 71 ரன்களுடன் (7 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்மிழக்காமல் இருந்தார். துணையாக ஆடிய பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் (3 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. பொலார்ட் 74 ரன்களிலும், ஹோல்டர் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்தியத் தரப்பில் ஷைனி 2 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x