'அதை மறக்க முடியாது; என் உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர் வைத்து விளையாடினேன்': மனம் திறந்த சச்சின்

சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியக் கிரிக்கெட்டுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் தீவிரமான வயிற்றுப்போக்கால் உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர் வைத்துக்கொண்டு விளையாடினேன் என்று சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.

2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 2003, மார்ச் 1-ம் தேதி சென்சூரியன் நகரில் இந்திய அணி மோதியது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சயித் அன்வர் சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது.

உலகக்கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதில்லை என்ற பெயரைக் காப்பாற்றும் வகையில் இந்திய அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் சச்சின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி 98 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் நிலையில் அக்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதேபோல சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் மார்ச் 10-ம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இதில் 97 ரன்கள் விளாசிய சச்சின் ஆட்டமிழந்தார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. இலங்கை அணி 109 ரன்களில் ஆட்டமிழக்க 183 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்த இரு ஆட்டங்களிலும் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் அளப்பரியது. இரு ஆட்டத்திலும் நூலிழையில் சதத்தை சச்சின் தவறவிட்டார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் சச்சின் 673 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருது பெற்றார். இதுவரை சச்சின் சேர்த்த 673 ரன்கள் சாதனையை எந்த வீரரும் உலகக்கோப்பையில் முறியடிக்க வில்லை.

உடல்நலக் குறைவு ஏற்பட்ட சூழலில், இந்த இருபோட்டியில் விளையாடியதை சச்சின் மனம் திறந்து பேசியுள்ளார்.

டெல்லியில் இந்தியா டுடே சார்பில் இன்ஸ்பிரேஷன் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் பேசியதாவது:

''கடந்த 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியதை என்னால் மறக்க முடியாது. அந்த இரு போட்டிகளுக்காக நான் எடுத்த முயற்சிகளும் அதிகம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் என்னால் நின்று விளையாடக் கூடமுடியாத அளவுக்கு உடல் அசதியாக இருந்தது. உடலில் 500 கிலோ எடையைக் கட்டிவைத்தது போன்று இருந்தது.

அணியின் உடல் தகுதி நிபுணர் ஆன்ட்ரூ லீபஸிடம் சிகிச்சை பெற்று உப்பு கலந்த நீரைப் பருகிக்கொண்டே விளையாடினேன். ஒரு கட்டத்தில் என்னால் நின்று விளையாடக் கூட முடியவில்லை. ஒருகட்டத்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு விழுந்துவிட்டேன், மீண்டும் எழ முயன்றேன் முடியவில்லை. என் உடம்புக்கு ஏதோ நடந்துவிட்டது என்று மட்டும் உணர முடிந்தது. ஆனால், கட்டுப்படுத்திக் கொண்டு உப்பு நீரைக் குடித்து விளையாடினேன்.

ஆனால், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது எனக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு, என்னால் நடக்கக் கூட முடியாத அளவுக்கு உடல் அசதி இருந்தது. எனக்கு நானே ஒரு செயலைச் செய்து கொண்டேன். இந்தச் செயலை வெளியே கூறியதில்லை, சிறிது கூச்சமாகவும் இருக்கிறது.

அந்தப் போட்டியின் போது நான் களமிறங்க முடிவு செய்தபின் உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர்களை வைத்துக் கொண்டு களமிறங்கி விளையாடினேன். அந்தப் போட்டியின் இறுதியில் என் உடல்நிலை மிகவும் மோசமாகி, நான் சோர்வடைந்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போதே நான் வயிற்றுப்போக்கால் சோர்வடைந்திருந்தேன். உடல்நிலை சரியில்லாத நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியபோது மேலும் உடல்நிலை மோசமானது.

குளிர்பானத்தில் உப்பு கலந்து குடித்துவிட்டு விளையாடிய பின்னர் உடல்நிலை மோசமானது. என் உள்ளாடையில் வைத்திருந்த டிஷ்யூ பேப்பர்களால் எனக்கு அசவுகரியக் குறைவு ஏற்பட்டு விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இடைவேளை நேரத்தில் நான் ஓய்வறைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆனாலும், நாட்டுக்காக என் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தேன். அந்தப் போட்டியை மறக்க முடியாது’’.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in