Published : 18 Dec 2019 12:53 PM
Last Updated : 18 Dec 2019 12:53 PM

என் ஓவரில் யாராவது 2 சிக்சர்கள் அடித்தால்... : தீபக் சாஹர் பேட்டி

புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்ததையடுத்து இந்திய அணியின் ‘ஸ்விங்’ பவுலராக அறியப்படும் தீபக் சாஹர் 3 வடிவங்களிலும் ஆட வேண்டும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு மணிக்கு 125 கிமீ வேகத்தில் தான் வீசுவது ஒரு போதும் போதாது என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“வரும் 6 மாதங்கள் உண்மையில் மிக மிக முக்கியமானது, நாங்கள் அனைவருமே இந்திய அணிக்காக அனைத்து கிரிக்கெட் ஆட்ட வடிவங்களிலும் ஆட வேண்டுமென்றே விரும்புகிறோம். டி20, ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறேன், அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்தான் பாக்கி. உடல் தகுதிதான் இப்போதைய கவனம், ஏனெனில் அனைத்து வடிவங்களிலும் ஆட வேண்டும் என்றால் உடல் தகுதி முக்கியம்.

ரஞ்சி டிராபி ஆடும்போது லைன் மற்றும் லெந்த், ஸ்விங் என்று கவனம் செலுத்தி வந்தேன். இடையில் கொஞ்சம் தடுமாறினேன், பிறகு இந்திய அணிக்கு வரும் பாதை கடினமாக இருந்தது. ரஞ்சி டிராபியிலிருந்து இந்திய அணிக்குப் போகவேண்டுமெனில் எக்கச்சக்கமாக ஆட வேண்டும். ஆனால் ஐபிஎல் ஆடியதால் என் கவனம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் மீது குவிந்தது.

பந்து வீச்சில் வேகம் அதிகம் தேவை, வெள்ளைப்பந்து அதிகம் ஸ்விங் ஆகாது. சிகப்பு கிரிக்கெட் பந்துதான் அதிகம் ஸ்விங் செய்யக்கூடியது. அதனால் ரஞ்சி டிராபியில் இருபக்கமும் ஸ்விங் செய்வார்கள், ஆனால் அங்கிருந்து வெள்ளைப்பந்துக்கு வரும் போது இந்த ஸ்விங் கிடைக்காது. நம் ஆக்‌ஷன் மூலம்தான் ஸ்விங் செய்ய முடியும். அதில்தான் நான் அதிகம் பயிற்சி செய்து வேகத்தைக் கூட்டினேன்.

இப்போது ஸ்லோ பவுன்சர் வீசுகிறேன், யார்க்கரை பயிற்சி செய்து வருகிறேன். என்னை யாராவது 2 சிக்சர்கள் அடித்தால் இப்போது அவரை யார்க்கர் போட்டு வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னையில் நல்ல தயாரிப்பில் ஈடுபட்டேன். சிஎஸ்கே அணிக்காக பவர் ப்ளேயில் 3 ஓவர்களை நான் வீசினேன், அதிகம் ஸ்விங் இருக்காது எனவே யார்க்கர் உள்ளிட்ட பலவிதமான பவுலிங் முறைகளையும் கற்பது அவசியம்.

நான் என் ரஞ்சி முதல் சீசனில் ஆடும்போது மணிக்கு 125 கிமீ வேகத்தில்தான் வீச முடியும். ஆனால் உயர்மட்ட கிரிக்கெட்டுக்கு இது போதாது, ஆகவே நான் வேகத்தை அதிகப்படுத்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனவே 140 கிமீ வேகத்தில் வீசுவதுதான் முக்கியம், மட்டை ஆடுகளத்தில் 150கிமீ வேகத்தை எதிர்கொண்டு விடலாம் ஆனால் 140 கிமீ வேகத்துடன் ஸ்விங் செய்யும் போது கடினமாகும்” என்றார் தீபக் சாஹர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x