Last Updated : 15 Dec, 2019 12:07 PM

 

Published : 15 Dec 2019 12:07 PM
Last Updated : 15 Dec 2019 12:07 PM

டி20 மட்டுமல்ல, ஒருநாள் போட்டியிலும்தான்: விரட்டல் மன்னன் விராட் கோலியை விடாமல் விரட்டும் ரோஹித் சர்மா

டி20போட்டிகளில் மட்டுமல்ல ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ரன்குவிப்பை முந்தும் வகையில் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா துரத்தி வருகிறார்.

டி20 போட்டியில் அதிகமான ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை விடாமல் துரத்தி வந்த ரோஹித் சர்மா மும்பையில் நடந்த கடைசி ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், தானும் சளைத்தவர் இல்லை என்று கோலியும் நொறுக்கி எடுத்தார்.

இதனால் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தலா 2,633 ரன்களுடன் சமநிலையில் இருக்கின்றனர். இதேநிலை ஒருநாள் போட்டியிலும் தொடர உள்ளது. விராட் கோலியை, துரத்தி வருகிறார் ரோஹித் சர்மா

இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் விராட் கோலியின் விளையாட்டுக்குச் சற்றும் குறைவில்லாமல் ரோஹித் சர்மாவும் விளையாடியுள்ளார். குறிப்பாக உலகக் கோப்பைப் போட்டியில் சதங்களாக அடித்து ரோஹித் சர்மா அனைவரையும் வியக்க வைத்தார்.

2019-ம் ஆண்டில் விராட் கோலி 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,288 ரன்கள் குவித்து, சராசரியாக 64.40 வைத்துள்ளார். இந்த ஆண்டிலும் அதிகபட்ச ரன் சேர்த்த வீரர் எனும் பெருமையைக் கோலி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ரோஹித்தும் துரத்தி வருகிறார். இந்த ஆண்டில் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 1,232 ரன்கள் குவித்து 53.56 சராசரி வைத்துள்ளார்.

விராட் கோலியின் ரன்களை எட்டிப்பிடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 56 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும், மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலியைக் காட்டிலும் அதிகமான ரன்களை ரோஹித் சர்மா குவித்தால் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிகமான ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்குஅடுத்த இடத்தில், ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 1,141 ரன்களும், மே.இ.தீவுகள் அணி வீரர் சாய் ஹோப் 1,123 ரன்களுடனும் உள்ளனர்.

இவர்கள் தவிர பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆஸம் 1,092 ரன்களும் இந்த ஆண்டில் சேர்த்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது இன்னும் 15 நாட்களில் எந்தவிதமான ஒருநாள் போட்டியிலும் விளையாடப் போவதில்லை.

ஆனால், இந்தியா,மே.இ.தீவுகள் அணி மட்டுமே விளையாட இருப்பதால், விராட் கோலி, ரோஹித் சர்மா இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருடன் இந்த ஆண்டில் இந்திய அணிக்குப் போட்டிகள் அனைத்தும் முடிகின்றன. அடுத்து ஜனவரி மாதம் இலங்கை தொடரும், நியூஸிலாந்துதொடரும் இருக்கிறது.

ஒருவேளை விராட் கோலி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிகமான ரன் சேர்த்தால் தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்த சாதனையை நிகழ்த்தும் வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் ஹெயின்ஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா ஆகியோர் தொடர்ந்து 3 முறை அதிகமான ரன்கள் குவித்திருந்தனர். அவர்களுடன் கோலி இணைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x