

பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை நாளை பெர்த் நகரில் நடக்கும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் எட்ட உள்ளார்.
மே.இ.தீவுகள் நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் பக்னர் இதுவரை 128 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராகச் செயல்பட்டு ஓய்வு பெற்றார். அவரின் சாதனையை அலீம் தார் நாளை முறியடிக்க உள்ளார். அலீம் தார் நாளை தனது 129-வது டெஸ்ட் போட்டியில் நடுவராக பணியாற்ற உள்ளார்.
51-வயதாகும் அலீ்ம் தார் 10 ஆண்டுகளாக முதல்தரப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி இருந்தார். அதன்பின், கடந்த 2003-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு இடையே டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் அறிமுகமானார். அதன்பின் 128 போட்டிகளுக்கு நடுவராக அலீம் தார் பணியாற்றியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, 2000 -ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நடுவராக அலீம் தார் அறிமுகமானார். இதுவரை 207 ஒருநாள் போட்டிகளுக்கு நடுவராக அலீம் தார் பணியாற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்க நடுவர் ரூடி கர்ட்சனின் 209 போட்டிகள் சாதனைக்கு இன்னும் 2 ஆட்டங்களை அலீம் தாருக்கு தேவைப்படுகிறது.
டி20 போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ள அலீம் தார் இதுவரை 46 போட்டிகளில் நடுவராகஇருந்துள்ளார்.
அலீம் தார் கூறியுள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
எனக்கு இது மைல்கல் போட்டியாகும். நான் கிரிக்கெட் போட்டியில் நடுவராக வருவேன் என்று நினைக்கவே இல்லை.ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நான் நடுவராக பணியாற்றி புதிய சாதனையைச் செய்ய இருப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டரில் உள்ள பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் இருந்து என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கியது.
ஸ்டீவ் பக்னர் என்னுடைய முன்மாதிரி. அவருடன் நான் ஏராளமான போட்டிகளில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான மறக்க முடியாத போட்டிகளை நான் பார்த்துள்ளேன். சில மறக்க முடியாத சாதனைகளான லாராவின் 400 ரன்கள், தெ.ஆப்பிரிக்க அணி 434 ரன்களை சேஸிங் செய்தது என நினைவில் நிற்கும் ஆட்டங்களை நேரில் பார்த்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்