Last Updated : 02 Dec, 2019 09:20 PM

 

Published : 02 Dec 2019 09:20 PM
Last Updated : 02 Dec 2019 09:20 PM

வரும் 19-ம் தேதி ஐபிஎல் ஏலம்: மொத்த வீரர்கள் எவ்வளவு? எந்தெந்த நாடுகளில் இருந்து எத்தனை வீரர்கள்? முழு விவரம்

கொல்கத்தாவில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் எத்தனை வீரர்கள் பங்கேற்கிறார்கள், எந்தெந்த நாடுகளில் இருந்து வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை பெங்களூருவில்தான் ஐபிஎல் ஏலம் நடைபெற்று வந்தது. பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவர் கங்குலி பதவி ஏற்றுள்ளதையடுத்து இந்த முறை ஏலம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19-ம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்கிறது.

ஐபிஎல் 2020க்காக ஒவ்வொரு அணிக்கும் ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏலத்தில் மீதமுள்ள தொகையுடன் கூடுதலாக ரூ.3 கோடி ஒவ்வொரு அணி உரிமையாளரின் இருப்பில் இருக்கும்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம்தான் ரூ.8.2 கோடி என்று அதிகபட்ச தொகை கையிருப்பில் உள்ளது. அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.15 கோடி வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.6.05 கோடி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 3.55 கோடி கையிருப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.3.2 கோடி உள்ளது. ஆர்சிபி அணியிடம் ரூ.1.80 கோடியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் ரூ.5.30 கோடியும் கைவசம் உள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் ஏலம்தான் ஏற்கெனவே இருக்கும் வீரர்களுக்கான கடைசி ஏலம். 2021 மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்யும்.

இந்த முறை ஏலத்துக்கு மொத்தம் 971 கிரிக்கெட் வீரர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளார்கள். இதில் 713 இந்திய வீரர்கள், வெளிநாடுகளில் இருந்து 258 வீரர்களும் தங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.

இதில் 215 வீரர்கள் ஏற்கெனவே ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். 754 வீரர்கள் இதுவரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத, அறிமுகமாகத் துடிப்பவர்கள். 2 வீரர்கள் இந்தியாவுக்கு நட்பு நாடுகளில் இருந்து சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதில் வீரர்கள் அனைவரும் 73 இடங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.

ஐபிஎல் வீரர்கள் பதிவு செய்தல் என்பது கடந்த மாதம் 30-ம் தேதியோடு முடிந்துவிட்டது. இனிவரும் 9-ம் தேதி வரை அணிகள் தங்களின் வீரர்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும். அதாவது எந்த வீரர்களைத் தக்கவைப்பது, விடுவிப்பது போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட வீரர்கள் தவிர்த்து ஐபிஎல் போட்டியில் விளையாடிய 19 இந்திய வீரர்கள், எந்தப் போட்டியிலும் பங்கேற்காத 634 இந்திய வீரர்கள், ஒரு ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடிய 60 வீரர்கள், சர்வதேசப் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ள 196 வீரர்கள், சர்வதேசப் போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லாத 60 வீரர்கள் களத்தில் உள்ளார்கள்.

இதில் ஆப்கானிஸ்தான் (19 வீரர்கள்), ஆஸ்திரேலியா (55வீரர்கள்), வங்கதேசம் (6 வீரர்கள்), இங்கிலாந்து (22 வீரர்கள்),நெதர்லாந்து (1 வீரர்), நியூஸிலாந்து (24 வீரர்கள்), தென் ஆப்பிரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39 வீரர்கள்), அமெரிக்கா (1 வீரர்), மே.இ.தீவுகள் (34வீரர்கள்), ஜிம்பாப்வே (3 வீரர்கள்) களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x