Last Updated : 29 Nov, 2019 05:49 PM

 

Published : 29 Nov 2019 05:49 PM
Last Updated : 29 Nov 2019 05:49 PM

ஸ்மித்தை சென்ட்-ஆஃப் செய்த யாஷிர் ஷா: வாசிம் அக்ரம் எச்சரிக்கை

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்து செல்லும்போது அவரை சென்ட்-ஆஃப் செய்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் யாஷிர் ஷா பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து பாகிஸ்தான் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை விளையாடியபோது பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்து வெளியேறும்போது அவரை வெறுப்பேற்றும்வகையில் கையில் 7 விரல்களைக் காட்டி யாசிர் ஷா கிண்டல் செய்தார். அதாவது இதுவரை யாசிர் ஷா பந்துவீச்சில் 7-வது முறையாக ஸ்மித் ஆட்டமிழந்தார் என்பதை குறிப்பிட்டார். இந்த பார்த்த ஸ்மித் ஆவேசத்துடன் வெளியேறினார்.

இருப்பினும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் யாசிர் ஷா நடந்து கொண்டது குறித்து முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்து சென்ட்-ஆப் செய்து யாசிர் ஷா தவறு செய்துவிட்டார். இந்த தவறுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

நாங்கள் விளையாடிய காலத்தில், நான் ஒரு வீரரை எத்தனை முறை ஆட்டமிழக்கச் செய்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவே இல்லை. அதுகுறித்து கவலைப்படவும் இல்லை. யார் ஆட்டமிழந்தது என்றுகூடக் கவனிக்கமாட்டேன்.

ஆனால், அனைத்தையும் இப்போது தலைக்குள் ஏற்றிக் கொள்கிறார்கள், யார் ஆட்டமிழந்தது, எத்தனை முறை ஆட்டமிழந்தார்கள் என அனைத்தையும் நினைவில் வைக்கிறார்கள். ஒருபந்துவீச்சாளராக நான் கவலைப்படுவதெல்லாம், நாம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோமோ அல்லது இல்லையா என்பது மட்டும்தான்.

பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தோமா இல்லையா என்பது குறித்துதான் கவலைப்பட வேண்டும். அதைவிடுத்து ஒரு பேட்ஸ்மேனை 7 முறை ஆட்டமிழக்கச் செய்ததெல்லாம் ஒரு விஷயமே அல்ல. இது அனுபவமின்மையால் ஏற்படும் தவறு" எனத் தெரிவித்தார்.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்ததால் ஸ்மித் தனக்குத்தானே தண்டனை கொடுத்துள்ளார். காபா மைதானத்தை சுற்றி வந்து தன்னுடைய தவறுக்கு தண்டனை கொடுத்துள்ளார்.

அதுகுறித்து ஸ்மித் கூறுகையில், " நான் போட்டிகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்தால் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்வேன். அதிகமான ரன் அடித்தால் எனக்கு நான் பரிசு கொடுத்துக் கொள்வேன். அதாவது நான் சதம் அடித்தால் அன்று இரவு தூங்கச்செல்லும் முன் எனக்கு நானே ஒரு சாக்லேட் கொடுத்துப் பாராட்டிக்கொள்வேன்.

அதேபோல ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்தால், மைதானத்தை அதிகமான முறை சுற்றிவந்தோ அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் அதிகமான நேரம் செலவிட்டோ தண்டனை கொடுப்பேன். ஆனாலும், யாசிர் ஷா என்னை ஆட்டமிழக்கச் செய்தது எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. அடுத்தமுறை அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடக்கூடாது என்ற கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. அடிலெய்டில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னும் கவனமாக விளையாடுவேன் " எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x