Last Updated : 28 Nov, 2019 09:46 PM

 

Published : 28 Nov 2019 09:46 PM
Last Updated : 28 Nov 2019 09:46 PM

நிரூபி... இல்லையேல் சாம்ஸனுக்கு வழியை விடுங்கள்: ரிஷப் பந்த்துக்கு வி.வி.எஸ்.லட்சுமண் அறிவுரை; தோனி வருவார்

ரிஷப் பந்த்துக்கான நேரம் வேகமாகக் கடப்பதால், அவர் தன்னுடைய பேட்டிங் ஃபார்மை அணி நிர்வாகத்திடம் நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். இல்லாவிட்டால் சஞ்சு சாம்ஸனுக்கு வழியை விட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்க்கப்பட்டு இருப்பது ரிஷப் பந்த்துக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்திருக்கிறது. இனிவரும் போட்டிகளில் ரிஷப் பந்த் தனது பேட்டிங் ஃபார்மை தேர்வுக் குழுவினரிடம் நிரூபிக்க வேண்டும் அல்லது சாம்ஸனுக்கு வழிவிட வேண்டும்.

ஏனென்றால் ரிஷப் பந்த்துக்கு அணியின் தேர்வுக் குழுவினர் ஏராளமான வாய்ப்புகளை வழங்கிவிட்டார்கள். ஆதலால் உறுதியாகக் கூறுகிறேன், சாம்ஸனின் வருகை நிச்சயம் ரிஷப் பந்த்துக்கு எச்சரிக்கை செய்தியாக இருக்கும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் எதையுமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் அணிக்குள் இருந்தாலே ஒருதுருப்புச் சீட்டுதான் என்பதை மறுப்பதற்கில்லை. சிறந்த பேட்ஸ்மேன், ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைக்கக் கூடியவர் என்பதை நான் மறுக்கவில்லை.

ஒரு பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கிவிட்டால், எந்தப் பந்தை அடிக்க வேண்டும், எந்த ஷாட் ஆட வேண்டும், எந்த ஷாட்டைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற திட்டம் இல்லாவிட்டால், சந்தேகமில்லாமல் அந்த பேட்ஸ்மேன் பெரும் அழுத்தத்துக்கு ஆளாவார்.

ஏனென்றால், ரிஷப் பந்த் பலமுறை பல்வேறு விதமான மனநிலையில் களமிறங்கி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

சரியான திட்டமிடல் இல்லாமல் பந்த் இருக்கிறார். அணியில் விளையாடும் 11 பேர் வீரர்களில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க ரிஷப் பந்த் கடும் அழுத்தத்தில் இருக்கிறார்.

இருப்பினும் ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வில் முதல் இடத்தில் இருக்கிறார். அதற்குப் பிறகு, அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு சஞ்சு சாம்ஸன் பெயர்தான் இருக்கிறது. அதேசமயம், தோனியையும் தேர்வுக்குழுவினர் மறக்கவில்லை.

ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் இனிவரும் போட்டிகளில் எவ்வாறு விளையாப் போகிறார்கள், பேட்டிங் திறன், கீப்பிங் திறன் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க தோனி சிறிது பொறுமையாக இருக்க வேண்டும். ஐபிஎல் போட்டி முடிந்த பின், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது தோனியை அழைக்கலாம். தோனி தற்போது முழுவீச்சில் ஐபிஎல் போட்டிக்காகத் தயாராக வருகிறார். சிஎஸ்கே அணியை வழிநடத்திச் செல்லும் போதெல்லாம் தோனி சிறப்பாகச் செயல்படுவார். அதில் உறுதியாக இருக்கிறேன்.

ஒருவேளை இரு இளம் வீரர்களான சஞ்சு சாம்ஸன், ரிஷப் பந்த் தங்களுக்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், சரியாக விளையாடாவிட்டால், நிச்சயம் தோனி அணிக்குள் திரும்பி வருவார் என்று நம்புகிறேன். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியை வழிநடத்தி அவர் விளையாடுவதைப் பார்த்து உலகக்கோப்பை அணிக்கும் தேர்வு செய்யப்படலாம்''.

இவ்வாறு வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x